ஜன நாயகன்| படத்தை ஏன் 10ஆம் தேதி ரிலீஸ் செய்யக் கூடாது..? நீதிபதி கேள்வி!
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், தணிக்கை சான்று பெறாததால் வெளியீடு தாமதமாகியுள்ளது. 500 கோடி ரூபாய் முதலீட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம், சென்சார் போர்டின் பரிந்துரைகளை பூர்த்தி செய்த பின்னரும் மத உணர்வுகளை புண்படுத்தும் புகாரின் காரணமாக மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால், படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.
விஜய் நடிப்பில் அவரது கடைசி படமாக உருவாகியிருக்கும் படம் `ஜனநாயகன்'. ஹெச் வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் மமிதா பைஜூ, பாபி தியோல், பூஜா ஹெக்டே, ப்ரியாமணி, பிரகாஷ்ராஜ் எனப் பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தின் பாடல்கள், டிரெய்லர் அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஜனநாயகன் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்திற்கு இன்னும் தணிக்கைச் சான்று வழங்கப்படவில்லை என்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில் இதுவரை தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை எனக் கூறி, படத்துக்கு தணிக்கை சான்று வழங்க உத்தரவிடவேண்டும் என பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்சன்ஸ் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, அவசர வழக்காக நீதிபதி பிடி ஆஷா முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஏன் 10ஆம் தேதி ரிலீஸ் செய்யக்கூடாது..
படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 500 கோடி ரூபாய் முதலீட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம், கடந்த டிசம்பர் மாதம் சென்சார் போர்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை ஆய்வு செய்த சென்சார் போர்டு, சில காட்சிகளை நீக்கவும், வசனங்களை மியூட் செய்யவும் அறிவுறுத்தியது. இந்த அத்தனை நிபந்தனைகளையும் பூர்த்தி செய்து, படத்தை மீண்டும் சென்சார் போர்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மீண்டும் படத்தை ஆய்வு செய்த சென்சார் போர்டு, படம் யு/ஏ சான்று பெற தகுதி உள்ளது என பரிந்துரைத்த நிலையில், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறி, படத்துக்கு எதிராக புகார் வந்துள்ளதாகக் கூறி, படத்தை மீண்டும் மறு ஆய்வு குழுவுக்கு சென்சார் போர்டு அனுப்பி வைத்துள்ளது. யாரும் படத்தை பார்க்காத நிலையில் எப்படி புகார் அளிக்கப்பட்டது என்பது தெரியவில்லை, இதனால் படத்துக்கு சான்று வழங்க உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.
சென்சார் போர்டு தரப்பில், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாக புகார் வந்ததால் மறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்தில் சான்று வழங்க வேண்டும் என நிர்பந்திக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, படத்துக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை நாளை தாக்கல் செய்யும்படி, சென்சார் போர்டுக்கு உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணை நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்த போது, ரிலீஸ் தேதியை முடிவு செய்தாலும் சட்டப்படி தான் செல்ல முடியும். சென்சார் போர்டு அறிவுறுத்தல்களை பெற வேண்டும் என சென்சார் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, படத்தின் ரிலீஸை ஏன் 10ஆம் தேதி தள்ளி வைக்க கூடாது? தை பிறந்தால் வழி பிறக்குமே? என பட தயாரிப்பு நிறுவனம் தரப்பிடம் நீதிபதி கூறினார். அதற்கு, படம் வெளியாகும் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விசாரணையை நீதிபதி, நாளைக்கு தள்ளிவைத்துள்ளார்.

