அடுத்த அதிபர் யார்? மகளா.. சகோதரியா? வடகொரியாவில் தொடங்கிய வாரிசு யுத்தம்?
வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் 13 வயது மகளான கிம் ஜு ஏ, அந்நாட்டின் அடுத்த அதிபராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தென் கொரியா சமீபத்தில் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், அந்தப் பதவிக்கு அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரியும் போட்டியாக இருப்பார் எனவும், இதனால் வாரிசுரிமை போர் நடைபெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடிக்கடி ஏவுகணைச் சோதனைகளில் ஈடுபட்டு வரும் கொரிய நாடுகளில் ஒன்றான வடகொரியா பற்றிய அரசு செய்திகள் பெரும்பாலும் வெளியுலகிற்குக் கசிவதில்லை. அந்நாடு பற்றிய அனைத்துச் செய்திகளும் மிகவும் ரகசியமாகவே வைக்கப்படும். அதையும் மீறி வந்தால், கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். எனினும், அவ்வப்போது அந்நாடு பற்றிய சில முக்கியமான செய்திகளை அதன் அண்டைநாடான தென்கொரியா தெரிவித்து விடும். அந்த வகையில், வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் 13 வயது மகளான கிம் ஜு ஏ, அந்நாட்டின் அடுத்த அதிபராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தென் கொரியா சமீபத்தில் தெரிவித்திருந்தது.
சமீபகாலமாக ராணுவ அணிவகுப்புகள், ஏவுகணைச் சோதனைகள் மற்றும் சீன அதிபருடனான சந்திப்பு என முக்கிய நிகழ்வுகளில் கிம் ஜாங் உன்னின் மகள் கிம் ஜுஏ முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார். இதனால், வடகொரியாவின் பாரம்பரியமான ஆண் ஆதிக்க தலைமைத்துவத்தை மீறி, தனது குடும்பத்தின் 4ஆவது தலைமுறை ஆட்சியை உறுதிப்படுத்த கிம் ஜாங் உன் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது. இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள ஆளும் கட்சி மாநாட்டில் இதுகுறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது, உண்மையாக மாறும்பட்சத்தில் அது குடும்பத்திற்குள் வாரிசுரிமைப் போரை தூண்டக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். காரணம், வட கொரியாவின் இரண்டாவது சக்திவாய்ந்த நபராக அதிபர் கிம்மின் 38 வயது சகோதரியான கிம் யோ-ஜாங் கருதப்படுகிறார். இவர், நாட்டின் இராணுவம் மற்றும் அதிகாரத்துவத்தின் மீது கணிசமான செல்வாக்கைக் கொண்டுள்ளார். தவிர, அரசியலிலும் நன்கு அனுபவமுடையவர். அந்த வகையில், தன் தந்தையுடன் கிம் ஜு ஏ பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டாலும் இன்னும் அவர் மிகவும் சிறு குழந்தையாக உள்ளார். தவிர, அவரது சரியான வயது இன்னும் எங்கும் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும் வட கொரிய அரசு ஊடகங்கள் அவரை, ’அன்பான மகள்’என்றே குறிப்பிடுகின்றன. இதனால், ஜு ஏ அடுத்த அதிபராக நியமிக்கப்பட வாய்ப்பு இருக்காது என்றே கணிக்கின்றனர்.
இந்த நிலையில்தான் இங்கிலாந்திற்கான முன்னாள் தென் கொரிய தூதரும், சியோலின் உளவுத்துறை சேவையின் முன்னாள் துணை இயக்குநருமான ராஹ் ஜோங், ”ஜு-ஏக்கு அதிகார மாற்றம் எளிதானது அல்ல” எனத் தெரிவித்திருப்பதுடன், ”கிம் யோ-ஜாங் உயர்மட்டத் தலைவராகும் வாய்ப்பு இருப்பதாக நம்பினால், அவர் அதை ஏற்றுக்கொள்வார்” எனத் தெரிவித்துள்ளார். எனினும், கிம் குடும்பத்தைப் பற்றிய பல விஷயங்கள் ரகசியமாகவே உள்ளன. ஆனாலும், வட கொரியாவில் நடக்கும் நிகழ்வுகளை, குறிப்பாக தலைமைத்துவத்தில் ஏற்படும் மாற்றங்களை, அண்டை நாடான தென் கொரியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
அதிபர் கிம் ஜாங் உன்னின் மூன்று குழந்தைகளில் கிம் ஜு ஏ, நடுத்தர குழந்தையாக அறியப்படுகிறார். 2022ஆம் ஆண்டு வரை வெளியுலகுக்கு வராத இவர், அந்த ஆண்டு வடகொரியா கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைச் சோதித்தபோது, தந்தையுடன் தோன்றினார். அதன்பிறகு, அவர் தொடர்ச்சியாக ராணுவ அணிவகுப்புகள் மற்றும் இதர நிகழ்வுகளில் பங்கேற்க ஆரம்பித்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.
அதிலும், கடந்த செப்டம்பரில் அவர் முதன்முறையாக சர்வதேச அளவில் தோன்றினார். அப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் நடத்திய இராணுவ அணிவகுப்பில் கலந்துகொள்ள தந்தையுடன் பெய்ஜிங்கிற்குச் சென்றார். இந்த நிகழ்வின்போது, கிம், ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் ஒன்றாகத் தோன்றினர். இருப்பினும், ஜு ஏ, நிகழ்வுகளின்போது பொதுமக்களின் பார்வையில் இருந்து விலகி இருந்தார்.

