கொல்லப்பட்டாரா நெதன்யாகு? ஈரான் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! Silent Mode-க்கு சென்ற இஸ்ரேல்!
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த ஒரு மாதமாக போர் பதற்றம் நிலவிய நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் இஸ்ரேல் அமெரிக்க ஆதரவுடன் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. Operation Epic Fury என்ற பெயரில் அமெரிக்காவும், Operation Roaring Lion என்ற பெயரில் இஸ்ரேலும் நடத்தும் இந்த தாக்குதலில் ஈரானின் பல்வேறு பகுதிகளிலும் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
ஈரானின் அணுசக்தித் திட்டங்களை முழுமையாக முடக்குவது, ஈரானின் ஏவுகணை மற்றும் பாதுகாப்பு உள்கட்டமைப்புகளைத் தகர்ப்பது, ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது ஆகியவை இந்த தாக்குதலின் நோக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் முதல் நாளிலேயே ஈரானின் அதிஉயர் தலைவர் அயத்துல்லா காமேனியை இஸ்ரேல் குண்டுவீசி படுகொலை செய்தது. இதன்மூலம் 1989 முதல் ஈரானின் உச்ச அதிகாரத்தில் இருந்த அவரது 37 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அவரின் மரணம் ஈரானை கடுமையாகக் கோபப்படுத்தியுள்ள நிலையில், அதற்கு ஈரான் தீவிரமாக பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் மற்றும் அவர் தங்கியிருக்கும் இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. மேலும், ஈரானின் தாக்குதலில் நெதன்யாகு உயிருடன் உள்ளாரா அல்லது கொல்லப்பட்டாரா என்பது உறுதிப்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் ஈரானின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானின் இந்த தாக்குதல் குறித்து இதுவரை இஸ்ரேல் தரப்பில் எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை. பொதுவாக, இத்தகைய தாக்குதல்களின்போது பிரதமர் பாதுகாப்பான நிலத்தடி பதுங்குக் குழிகளுக்கு மாற்றப்படுவது வழக்கம் என்பதால் நெதன்யாகு குறித்த தகவல் வெளியாவதில் தாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த இரு நாட்களில் இஸ்ரேலை நோக்கி ஈரான் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தாத நிலையில், திடீரென நடத்தப்பட்ட இந்தப் பெரும் தாக்குதல் இஸ்ரேலில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. போர் தொடங்கியதில் இருந்து ஈரானின் தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட இஸ்ரேல் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

