ஈரான் | உச்சபட்ச அதிகாரம் யாரிடம் உள்ளது? உண்மையைக் கண்டுபிடித்த அமெரிக்கா!
ஈரானின் உச்சபட்ச அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்கிற கருத்து, கடந்த சில நாட்களாக நிலவி வருகிறது. அந்த வகையில், ஈரானில் நிஜமான அதிகாரம் தற்போது IRGC எனப்படும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிப்படை வசமே உள்ளதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி போன்ற மிதவாத நிலைப்பாடு கொண்டவர்கள் ஓரம் கட்டப்பட்டுள்ளதாக அம்மையம் கூறியுள்ளது.
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போர், இரண்டு வார காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அது நாளையுடன் முடிவுக்கு வருகிறது. தொடர்ந்து, போரை நிறுத்தும் பணியில் அமெரிக்கா - ஈரான் இடையே இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தையை நடத்த பாகிஸ்தான் தயாராகி வருகிறது. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையை ஈரான் புறக்கணித்துள்ளது. அமெரிக்கா வைக்கும் கோரிக்கைகளும், கெடுபிடிகளுமே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. தவிர, ஈரானுக்குச் சொந்தமான கப்பலைப் பிடித்து வைத்திருப்பதும் ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஈரானின் உச்சபட்ச அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்கிற கருத்து கடந்த சில நாட்களாக நிலவி வருகிறது.
அந்த வகையில், ஈரானில் நிஜமான அதிகாரம் தற்போது IRGC எனப்படும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிப்படை வசமே உள்ளதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. வாஷிங்டனைச் சேர்ந்த போர் ஆய்வு மையம் அண்மைக்கால நிகழ்வுகளை ஆய்வுசெய்து இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஈரானின் பாதுகாப்பிலிருந்து வெளியுறவுத் தொடர்புகள் வரை அனைத்திலும் புரட்சிப் படையே முடிவுகளை எடுப்பதாகவும் ஈரானுக்குள் அதிகாரம் கை மாறியிருப்பதை இது காட்டுவதாகவும் அம்மையம் கூறியுள்ளது.
இதன் மூலம் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி போன்ற மிதவாத நிலைப்பாடு கொண்டவர்கள் ஓரம் கட்டப்பட்டுள்ளதாக அம்மையம் கூறியுள்ளது. ஈரானில் அரசுத் தலைவர்கள் கூறுவது ஒன்றும் ராணுவம் செய்வது ஒன்றுமாக இருந்துவந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த ஆய்வுத் தகவல் உள்ளது. முன்னதாக, கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா - இஸ்ரேலிய தாக்குதலில் அந்நாட்டின் உச்சபட்ச தலைவராக இருந்த அலி கமேனி மரணத்திற்குப் பிறகு, அவரது மகன் மொஜ்தபா கமெனி உச்சபட்ச தலைவர் பதவியை ஏற்றதாகச் செய்திகள் வெளியாகின.
எனினும், அவர் இன்னும் பொதுவெளியில் தோன்றாததும், அவர் கூறியதாக அந்நாட்டு அரசு ஊடகத்தில் அறிக்கை வாசிக்கப்பட்டதும் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இன்னும் சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது. அலி கமேனி இறந்த அன்றே, இவரும் தாக்கப்பட்டதாகவும், கடுமையான காயம் காரணமாக அவர் கோமா நிலைக்குச் சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும், அவர் பற்றிய தகவலைச் சேமிக்கும் நிலையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க உளவுத்துறை ஈடுபட்டு வருகிறது.

