பதிலுக்குப் பதில்.. அமெரிக்க ராணுவக் கப்பல்களைத் தாக்கிய ஈரான்.. பதற்றத்தில் மத்திய கிழக்கு!
ஓமன் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த அமெரிக்க ராணுவக் கப்பல்களை ஈரான் தாக்கியுள்ளது. ஈரானியக் கப்பலுக்கு எதிராக அமெரிக்கக் கடற்படை சமீபத்தில் மேற்கொண்ட நடவடிக்கைக்குப் பதிலடியாக ஈரானியப் படைகள் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியதாக ஈரானின் அரசு செய்தி நிறுவன அறிக்கை தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் இன்னும் பதற்றம் குறைந்தபாடில்லை. ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் லெபனான் - இஸ்ரேல் இடையே தற்காலிகமாக போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்தாலும் தொடர்ந்து அதை நிறுத்துவதற்கு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையை சுமுகமாக முடிக்க பாகிஸ்தான் மத்தியஸ்தம் மேற்கொண்டு வருகிறது. ஆனால், இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தையை ஈரான் புறக்கணித்துள்ளது. இதனால், மீண்டும் மத்திய கிழக்கில் போர் நிலவும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் எச்சரிக்கையும், ஈரானுக்குச் சொந்தமான கப்பலையும் பிடித்ததுமே இதன் பின்னணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஓமன் வளைகுடா பகுதியில் ஈரான் கொடியுடன் சென்ற டூஸ்கா சரக்கு கப்பலை அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஸ்ப்ரூயன்ஸ் போர்க்கப்பல் வழிமறித்து, துப்பாக்கிச் சூடு நடத்தி கப்பலைச் செயலிழக்கச் செய்து, அமெரிக்க கடற்படை வீரர்கள் ஈரான் கப்பலில் புகுந்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இது ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளை என ஈரான் கடுமையாக கண்டனம் தெரிவித்தது.
இந்த கடற்கொள்ளை நடவடிக்கைக்கு விரைவில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் ராணுவம் எச்சரித்திருந்தது. மேலும், இது போர் ஒப்பந்தத்தை மீறியதாக ஈரான் குற்றஞ்சாட்டியிருந்தது. இதற்குப் பதிலடியாக ஓமன் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த அமெரிக்க ராணுவக் கப்பல்களை ஈரான் தாக்கியுள்ளது. ஈரானியக் கப்பலுக்கு எதிராக அமெரிக்கக் கடற்படை சமீபத்தில் மேற்கொண்ட நடவடிக்கைக்குப் பதிலடியாக ஈரானியப் படைகள் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியதாக ஈரானின் அரசு செய்தி நிறுவன அறிக்கை தெரிவித்துள்ளது.
அது வெளியிட்ட அறிக்கையில், “ஈரானியப் படைகளும் ஆளில்லா விமானங்கள் மூலம் சில அமெரிக்க இராணுவக் கப்பல்களைத் தாக்கின. அமெரிக்கா ஈரானுக்கான கடற்படை முற்றுகையை அறிவித்த அதே நேரத்தில், ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியை முழுமையாக மூடியுள்ளது. ஈரானின் அனுமதியின்றி அப்பகுதி வழியாகச் செல்லும் எந்தவொரு கப்பலும் அல்லது எண்ணெய்க் கப்பலும் ஈரானியப் படைகளால் தண்டிக்கப்படும்” என அது தெரிவித்துள்ளது. அமெரிக்கப் போர்க்கப்பல்களை நோக்கி ஈரானியக் கடற்படை ஆளில்லா விமானங்களை ஏவியதாக அரசு தொலைக்காட்சியும் செய்தி வெளியிட்டது. இருப்பினும், தாக்குதலின் அளவு குறித்தோ அல்லது ஆளில்லா விமானத் தாக்குதல்களில் அமெரிக்கக் கொடி ஏந்திய கப்பல்கள் சேதமடைந்தனவா என்பது குறித்தோ எந்த விவரங்களும் வழங்கப்படவில்லை. இப்பகுதியில் நிலவும் நிலையற்ற போர்நிறுத்தத்திற்கு மத்தியில், இந்தத் தாக்குதல்கள் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளன.

