"அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் நாட்டின் சொத்துகள்.." - ஈரான் உச்ச தலைவர்
ஹார்முஸ் நீரிணை நிர்வாகத்திற்காக புதிய சட்டக் கட்டமைப்புகளை உருவாக்கப் போவதாகவும், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்திலிருந்து பேராசையுடன் வரும் வெளிநாட்டு சக்திகளுக்கு இப்பகுதியில் எந்த உரிமையும் இல்லை எனவும் காமேனி தெரிவித்தார். அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் தரை, கடல், வான் எல்லைகளைப் போலவே பாதுகாக்க வேண்டிய தேசிய சொத்துகள் என அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் இழுபறியாகவே இருந்துவருகிறது. உலகின் 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் கப்பல்களைக் குறிவைத்து தாக்கியும், கைப்பற்றியும் அச்சுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் ஹார்முஸ் நீரிணை மீது ஈரானுக்கு மட்டுமே முழு அதிகாரம் உள்ளது என்று ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி அமெரிக்காவுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்திருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அமெரிக்கா உடனான போர் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டொனால்டு ட்ரம்ப் மற்றும் அமெரிக்காவின் கொள்கைகள் பாரசீக வளைகுடா பகுதியில் தோல்வியடைந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணை மீது ஈரானுக்கு இருக்கும் முழு அதிகாரத்தையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இப்பகுதியில் வெளிநாட்டு சக்திகளின் தலையீட்டை ஈரான் ஒருபோதும் அனுமதிக்காது என மொஜ்தபா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
உலகின் மிக முக்கியமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான இந்த குறுகிய நீர்வழியை நிர்வகிப்பதற்காக ஈரான் "புதிய சட்டக் கட்டமைப்புகளை" உருவாக்கும் என்றும் கமெனி கூறியுள்ளார்.
ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலிருந்து வந்து, பேராசையின் காரணமாகத் தீய நோக்கத்துடன் செயல்படும் வெளிநாட்டினருக்கு, ஹார்முஸ் நீரிணை மீது எந்த அதிகாரமும் இல்லை என்று அந்த அறிக்கை கூறுகிறது .
மேலும் ஈரான் தனது அணுசக்தித் திறன்களையும் ஏவுகணைத் திட்டத்தையும் தக்கவைத்துக் கொள்ளும் என்றும், நாட்டின் தரை, கடல் மற்றும் வான் எல்லைகளைப் போலவே அவையும் பாதுகாக்கப்பட வேண்டிய “தேசிய சொத்துக்கள்” என்றும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

