ஹார்முஸ் நீரிணையில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா.. ஈரான் கப்பல் முடக்கம்.. அடுத்து என்ன?
ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே தடையை மீறிச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் ஈரான் கொடி ஏற்றப்பட்ட சரக்குக் கப்பல் ஒன்றை அமெரிக்கப் படைகள் கைப்பற்றியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே 40 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தப் போரின் காரணமாக, உலகின் 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியது. இதனால், உலகம் முழுவதும் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் தான், பாகிஸ்தானின் மத்தியஸ்தம் காரணமாக 2 வாரத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நிரந்த போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை, ஈரான் - அமெரிக்கா இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட 10 நிபந்தனைகளை ஈரான் முன்வைத்திருந்தது.
இந்த சூழலில், இஸ்ரேல் - லெபனான் நாடுகளுக்கிடையே 10 நாட்களுக்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஹார்முஸ் நீரிணையை, ஈரான் மீண்டும் திறந்தது. எனினும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஈரான் அமெரிக்காவுடன் முழுமையான போர் ஒப்பந்த உடன்படிக்கைக்கு வரும்வரை, அமெரிக்கா முழு சக்தியுடன் தொடர்ந்து ஈரான் துறைமுகத்திற்கு செல்லும் கப்பல்களை முற்றுகையிடும் எனக் கூறியிருந்தார். இதனால் அதிருப்தி அடைந்த ஈரான், மீண்டும் கட்டுப்பாடுகளை விதிப்பதாக தெரிவித்துள்ளது. இது, உலகநாடுகளிடையே எரிபொருள் பற்றாக்குறை தொடர்பான அச்சத்தை அதிகரித்திருக்கிறது.
இந்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே தடையை மீறிச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் ஈரான் கொடி ஏற்றப்பட்ட சரக்குக் கப்பல் ஒன்றை அமெரிக்கப் படைகள் கைப்பற்றியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், டூஸ்கா என அடையாளம் காணப்பட்ட அந்தக் கப்பல், ஓமான் வளைகுடாவில் அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஸ்ப்ரூயன்ஸ் என்ற போர்க்கப்பலால் வழிமறிக்கப்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தற்போது, அமெரிக்கக் கடற்படையினர் அந்தக் கப்பலைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், அதில் என்ன இருக்கிறது என்பது விசாரிக்கப்பட்டது வருவதாகவும், சட்டவிரோத நடவடிக்கைகள் காரணமாக, அந்தக் கப்பல் அமெரிக்க கருவூலத் துறையின் தடைகளுக்கு உள்ளாகியுள்ளது என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், ’இதை ஆயுதமேந்திய கடற்கொள்ளை செயல்’ என்று ஈரானின் இராணுவத் தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் இந்தச் சம்பவம் குறித்து தெஹ்ரான் மௌனம் காக்காது என்றும், வாஷிங்டனுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. தவிர, இந்த சம்பவம் டெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான இரண்டு வார கால போர் நிறுத்தத்தை அமெரிக்கா மீறிவிட்டதாக அக்குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது, இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தையில் சிக்கலை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

