பேச்சுவார்த்தை புறக்கணிப்பு.. அமெரிக்காவுக்கு அடிபணியாத ஈரான்.. பின்னணி இதுதான்!
பாகிஸ்தானில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2ஆவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தையை ஈரான் புறக்கணித்துள்ளது. அமெரிக்காவின் நிபந்தனைகள் அதீதமாகவும் சாத்தியமற்றதாகவும் உறுதியற்றதாகவும் இருப்பதாக கூறி இம்முடிவை தங்கள் அரசு எடுத்துள்ளதாக ஈரான் ஊடகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான தற்காலிகப் போர் நிறுத்தம் நாளையுடன் நிறைவு பெற இருக்கிறது. அதை நீட்டிப்பதற்கும் பதற்றங்களைத் தணிப்பதற்கும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்த மத்தியஸ்தம் செய்யும் பாகிஸ்தான் முயன்று வருகிறது. ஆனால் இதில் ஈரான் கலந்துகொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் எச்சரிக்கையும், ஈரானுக்குச் சொந்தமான கப்பலையும் பிடித்ததுமே இதன் பின்னணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் நிபந்தனைகளை ஈரான் ஏற்கவில்லை என்றால், அங்குள்ள ஒவ்வொரு மின் நிலையத்தையும் மற்றும் பாலங்களையும் அமெரிக்கா தகர்த்துவிடும் என அவர் எச்சரித்திருந்தார்.
தவிர, ஈரானுக்குச் சொந்தமான கப்பல் ஒன்றையும் அமெரிக்க கடற்படை பிடித்துச் சென்றது. ஓமன் வளைகுடா பகுதியில் ஈரான் கொடியுடன் சென்ற டூஸ்கா சரக்கு கப்பலை அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஸ்ப்ரூயன்ஸ் போர்க்கப்பல் வழிமறித்து, துப்பாக்கி சூடு நடத்தி கப்பலை செயலிழக்கச் செய்து, அமெரிக்க கடற்படை வீரர்கள் ஈரான் கப்பலில் புகுந்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
இது ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளை என ஈரான் கடுமையாக கண்டனம் தெரிவித்தது. மேலும், இது போர் ஒப்பந்தத்தை மீறியதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த விவகாரம் அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தையை மேலும் சிக்கலாக்கி உள்ளது. அமெரிக்காவின் அளவுக்கு அதிகமான கோரிக்கைகள், நிலைப்பாட்டில் தொடர்ச்சியான மாற்றங்கள், தனது துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் தொடர்ச்சியான முற்றுகை ஆகியனவும் ஈரானைக் கோபமடையச் செய்துள்ளது. இதையடுத்தே, இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை ஈரான் புறக்கணித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவின்நிபந்தனைகள் அதீதமாகவும் சாத்தியமற்றதாகவும் உறுதியற்றதாகவும் இருப்பதாக கூறி இம்முடிவை தங்கள் அரசு எடுத்துள்ளதாக ஈரான் ஊடகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், பேச்சுவார்த்தைகள் நடைபெறுமா என்பதை பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. ஆனால் அவற்றை நடத்துவதற்கான தயார்நிலையைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. இதற்கிடையே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் மீண்டும் போர் மூண்டால், தம்மிடம் புதிய வியூகங்கள் இருப்பதாக ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், அச்சுறுத்தல்களின் நிழலில் பேச்சுவார்த்தைகளை நாங்கள் ஏற்க மாட்டோம், மேலும் கடந்த இரண்டு வாரங்களாக போர்க்களத்தில் புதிய வியூகங்களை காட்ட நாங்கள் தயாராகி வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

