ஈரான் போர் நிறுத்தம்.. அமெரிக்க இராணுவத்தில் ஆயுத நெருக்கடி காரணமா?
அமெரிக்கா தனது துல்லிய வழிகாட்டுதல் கொண்ட பல ஆயுதங்களை (precision-guided munitions) முழுமையாகப் பயன்படுத்தித் தீர்த்துவிட்டது; இந்த மிக முக்கியமான வளங்களை மீண்டும் நிரப்புவது ஒரு நீண்டகால செயல்முறையாக இருக்கிறது. போர்நிறுத்த நீட்டிப்புக்கான காரணம் இராஜதந்திரத்தை மையமாகக் கொண்டுள்ளது என்று எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, ஈரானுக்கு அதிக நேரம் கொடுப்பது, ஈரானியத் தலைமைக்குள் இருக்கும் உள் பிளவுகளைத் தீர்த்து, ஒரு சீரான பேச்சுவார்த்தை நிலைப்பாட்டிற்கு வர உதவும் என்று ட்ரம்ப் நிர்வாகம் வாதிட்டிருந்தது. அதேபோல, மத்தியஸ்தம் செய்யும் பாகிஸ்தான், பதற்றம் தொடர்ந்தால் எரிசக்தி சந்தைகள் சீர்குலையும் மற்றும் கடற்படை முற்றுகையின் மூலம் அழுத்தத்தைக் கொடுப்பது போன்ற காரணங்கள் கூறப்பட்டாலும் அதில் உண்மையில்லை என்று கூறப்படுகிறது.
உண்மையிலேயே அமெரிக்கா ராணுவத்தில் ஆயுத நெருக்கடி ஏற்பட்டிருப்பதாலேயே போர் நிறுத்தம் நடைமுறை படுத்தப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது.
இந்தசூழலில் தான், அமெரிக்க ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதாக உத்திசார் மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம் (CSIS) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிக்கை ஆயுதங்களின் பொதுவான பற்றாக்குறையை அடிக்கோடிட்டுக் காட்டுவதோடு, ஈரான் மோதலின் போது பெருமளவில் பயன்படுத்தப்பட்ட நவீன நீண்ட தூரத் தாக்குதல் ஏவுகணைகள், பேட்ரிய்ட்டிக் ஏவுகணைகள் மற்றும் துல்லியத் தாக்குதல் ஆயுதங்கள் ஆகியவை கணிசமான அளவில் குறைந்துள்ளது என்று கூறுகிறது.
இந்த ஆயுதங்களை எளிதாகவோ அல்லது விரைவாகவோ தயாரிக்க முடியாது என்றும் இந்த ஆயுதங்கள் நீடித்த, உயர்-தீவிர மோதலுக்காக ஒருபோதும் வடிவமைக்கப்படவில்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. அமெரிக்கா, ஆயுதங்களை உற்பத்தி செய்வதை விட வேகமாகப் பயன்படுத்தி வருகிறது. உற்பத்தியை விரிவுபடுத்துவது சாத்தியம்தான் ஆனால், அதற்குத் தொடர்ச்சியான முதலீடு, ஒப்பந்தங்கள் மற்றும் குறைந்த நேரத்தில் அதாவது ஒரு போரின் மத்தியில் சாத்தியமில்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது .
ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு அமெரிக்காவிடம் போதுமான ஆயுதங்கள் இருக்கவே இருந்தாலும் போரின் தன்மை மாறும் பட்சத்தில் சீனா போன்ற ஒரு சமமான போட்டியாளருக்கு எதிராக நிற்க போதுமானதாக இருக்காது என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது. அமெரிக்காவால் போரிட முடியாது என்பதல்ல இதன் உட்பொருள். மாறாக இந்த காலகட்டத்தில்தான் ஆயுதக் கிடங்குகள் மீண்டும் நிரப்பப்படும் காலமாக பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து போரிடும் திறனை தக்க வைத்துள்ள ஈரான்
ஈரானியப் படைகள் கடுமையாக பலவீனப்படுத்தப்பட்டுள்ளன என்று கூறப்பட்ட போதிலும், ஈரான் இன்னும் கணிசமான ஆயுதக் கிடங்கைக் கொண்டுள்ளது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏப்ரல் மாத தொடக்கத்தில் போர் நிறுத்தம் தொடங்கியபோது, ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏவுதள அமைப்புகளில் சுமார் பாதி அப்படியே இருந்ததாக மூன்று அதிகாரிகள் CBS செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.
ஐ.ஆர்.ஜி.சி-யின் கடற்படையில் சுமார் 60%, அதிவேகத் தாக்குதல் படகுகள் பயன்பாட்டில் இருப்பதாகவும் ஈரானின் விமானப்படையில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு இன்னும் செயல்பாட்டில் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.

