புக்கர் பரிசு (Booker Prize) அறக்கட்டளையால் ஆண்டுதோறும் இரண்டு இலக்கிய விருதுகள் வழங்கப்படுகின்றன. அதில் ஒன்று புக்கர் பரிசு; மற்றொன்று சர்வதேச புக்கர் பரிசு. ஒரு படைப்பு முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தால் அந்த படைப்புக்கு புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. அதேவேளையில், அந்தப் புத்தகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் அதற்கு சர்வதேச புக்கர் பரிசு வழங்கப்படுகிறது.
இந்தப் பரிசுகளுக்கான நோக்கம் ‘பொது நலனுக்காக இலக்கியத்தின் கலை மற்றும் மதிப்பை மேம்படுத்துவது மற்றும் அதிகம் அங்கீகரிக்கப்படாத மொழிபெயர்ப்பாளர்களின் வேலைகளை அங்கீகரிப்பது’ (to promote the value and art of literature for the benefit of the public as well as to acknowledge the often-unacknowledged work of the many literary translators) என்று புக்கர் பரிசுகளுக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புக்கர் பரிசு 1969 முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதில், முதலில் நடுவர் குழுவினரால், ஒரு நீண்டபட்டியல் வெளியிடப்படும். அதில் சுமார் 13 படைப்புகள் இடம்பெறும். இந்த நீண்ட பட்டியல் ஆண்டுதோறும் தோராயமாக ஜூலையில் அறிவிக்கப்படும். பின்னர் அதிலிருந்து 6 புத்தகங்களின் குறுகிய பட்டியல் செப்டம்பரில் அறிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து வெற்றியாளர் அக்டோபர் அல்லது நவம்பரில் அறிவிக்கப்படுவார். புக்கர் பரிசு வெற்றியாளருக்கு £50,000 பரிசுத் தொகை வழங்கப்படும்.
இதில் 2023ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசை பெறுவதற்கான நீண்ட பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் A Spell of Good Things, Old God’s Time, Study for Obedience, If I Survive You, How to Build a Boat, This Other Eden, Pearl, All the Little Bird-Hearts, Prophet Song, In Ascension, Western Lane, The Bee Sting, The House of Doors உள்ளிட்ட 13 புத்தகங்கள் இடம்பிடித்துள்ளன. இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான சேத்னா மாரூ என்பவர் எழுதிய ‘வெஸ்ட்ரன் லேன்’ (Western Lane) என்ற நாவலும் இடம்பிடித்துள்ளது. இது அவருடைய முதல் நாவல் என்பது கூடுதல் சுவாரஸ்யம். இந்த நாவல், கோபி என்ற 11 வயது ஸ்குவாஷ் விளையாட்டு சிறுமியைப் பற்றிய கதையாகும்.
இந்த புக்கர் பரிசை, கடந்த காலங்களில் The God of Small Things (தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்) என்ற புத்தகத்தை எழுதிய அருந்ததி ராய், Midnight's Children (மிட்நைட்ஸ் சில்ட்ரன்) எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, The Inheritance of Loss (தி இன்ஹெரிட்டன்ஸ் ஆஃப் லாஸ்) எழுதிய கிரண் தேசாய் மற்றும் The White Tiger (தி ஒயிட் டைகர்) எழுதிய அரவிந்த் அடிகா போன்ற பல இந்திய வம்சாவளி எழுத்தாளர்கள் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுபோல், சர்வதேச புக்கர் பரிசு (International Booker Prize) 2005இல் தொடங்கி வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த இந்தப் பரிசு, பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புகள் உட்பட பல படைப்புகளுக்கு வழங்கப்பட்டது. 2015ஆம் ஆண்டில், சர்வதேச புக்கர் பரிசின் விதிகள் அதை வருடாந்திர பரிசாக மாற்றியது. இந்த விதிகளின்படி, £50,000 பரிசுத்தொகை ஒவ்வோர் ஆண்டும் ஆசிரியருக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் சமமாகப் பிரித்து வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான (2023) சர்வதேச புக்கர் பரிசு, ‘டைம் ஷெல்டர்’ (Time Shelter) என்ற நாவலுக்காக வழங்கப்பட்டது. பல்கேரிய எழுத்தாளர் ஜோர்ஜி கோஸ்போடினோவ் எழுதிய இந்த நாவலை ஏஞ்சலா ரோடலுடன் என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார். இந்த நாவல், அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக சுவிட்சர்லாந்தில் ஒரு கிளினிக்கை உருவாக்கும் மனநல மருத்துவரை மையமாகக் கொண்டது.
முன்னதாக, கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட இந்த ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசின் 13 நூல்களைக் கொண்ட இறுதிப்பட்டியலில், பிரபல தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘பூக்குழி’ என்ற நாவலும் இடம்பெற்றிருந்தது. பின்னர், கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட குறும்பட்டியலில், Still Born, Standing Heavy, Time Shelter, The Gospel According to the New World, Whale Boulder ஆகிய 6 நூல்களே இடம்பெற்றிருந்தன. அந்த வகையில் பெருமாள் முருகன் எழுதிய நாவல் இடம்பெறவில்லை. மேற்சொன்ன 6 நூல்களில்தான், இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்த ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசை ‘டைம் ஷெல்டர்’ நூல் வென்றிருக்கிறது. இது, கடந்த மே 23ஆம் தேதி அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.