'புக்கர்' பரிசு வென்ற உலகின் முதல் இளம் பெண் எழுத்தாளர் கிரண் தேசாய் பிறந்தநாள் இன்று

'புக்கர்' பரிசு வென்ற உலகின் முதல் இளம் பெண் எழுத்தாளர் கிரண் தேசாய் பிறந்தநாள் இன்று
'புக்கர்' பரிசு வென்ற உலகின் முதல் இளம் பெண் எழுத்தாளர் கிரண் தேசாய் பிறந்தநாள் இன்று

எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உலகின் உயரிய விருதான புக்கர் பரிசை வென்ற இரண்டாவது இந்தியப் பெண், உலகில் புக்கர் பரிசு வென்ற முதல் இளம் பெண் போன்ற பெருமைகளுக்குரிய கிரண் தேசாய்யின் 49 வது  பிறந்தநாள் இன்று.

டெல்லியில் 1971 ஆம் ஆண்டு செப்டம்பர் இதே நாளில்தான் கிரண் தேசாய்  பிறந்தார். இவரின் அம்மா புகழ்பெற்ற எழுத்தாளர் அனிதா தேசாய். 1978 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது நவால்கள் படங்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன. 15 வயதுவரை இந்தியாவில் வாழ்ந்த கிரண் தேசாய் குடும்பத்தினர்,  அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்ததால் கல்லூரிப் இளநிலை பட்டப்படிப்பையும் முதுநிலை பட்டப்படிப்புகளையும் அங்குதான் முடித்தார்.

அம்மா அனிதா தேசாய்யுடன் கிரண் தேசாய்

இவருக்கும் அம்மாவைப் போலவே இவருக்கும் எழுத்தின் மீதே தீராக்காதல். விளைவு 27 வயதிலேயே முதல் நாவலை 1998 ஆம் ஆண்டு வெளியிட்டார். முதல் நாவலே விருதுகளை குவித்ததால், இரண்டாவது நாவலுக்கு இலக்கிய வாசகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எகிறிக்கிடந்தன. அனைவரின் நம்பிக்கையும் வீண்ப்போகவில்லை. 2006 ஆம் ஆண்டு தனது இரண்டாவது புத்தகமான ”தி இன்ஹெரிடென்ஸ் ஆஃப் லாஸ்” வெளியிட்டார் கிரண் தேசாய்.  அந்நாவல், எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உலகின் உயரிய விருதான ‘புக்கர்’ பரிசை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது.   

கடந்த 2006 ஆம் ஆண்டு எழுத்தாளர்களின் அங்கீகாரமாகவும் அடையாளமாகவும் திகழும் புக்கர் பரிசுக்காக உலகின் ஒட்டுமொத்த ஆங்கில நாவல்களும் போட்டயிட்டபோது,  35 வயதே ஆன கிரண் தேசாய், இரண்டாவது நாவலிலேயே அப்பரிசை வென்று எழுத்துலகையே உற்றுநோக்க வைத்தார். ஆனால், இவரது அம்மா அனிதா தேசாய், இதுவரை மூன்றுமுறை போட்டியிட்டும் கிடைக்காத புக்கர் பரிசு , அவரது மகளுக்கு கிடைத்தது. தாய் எட்டடி பாய்ந்தால் மகளோ 16 அடி அல்ல; 32 அடி பாய்ந்துவிட்டார். கிரண் தேசாயின்  ’தி இன்ஹெரிடன்ஸ் ஆஃப் லாஸ்’ புத்தகம் மட்டும் 40 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கிரண் தேசாய்க்குப் பிறகு இந்திய பெண் எழுத்தாளர்கள் யாருக்கும் புக்கர் பரிசு இன்னும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புக்கர் பரிசு பெற்ற இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர்

1968 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட புக்கர் பரிசை முதன்முதலில் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் வி.எஸ் நைப்பால் (1971). அவருக்கு அடுத்ததாக  சல்மான் ருஷ்டி (1981)  அருந்ததி ராய் (1997) , நான்காவதாக கிரண் தேசாய் (2006) ஐந்தாவதாக அரவிந்த் அடிகா (2008) ஆகிய ஐந்துபேர்தான் இவ்விருதை வென்றுள்ளவர்கள். வெற்றிபெறும் எழுத்தாளருக்கு 65 ஆயிரம் டாலர் பரிசாக வழங்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com