மரண தண்டனை விவகாரம் | கோரிக்கை வைத்த வங்கதேச அரசு.. ஷேக் ஹசீனாவை இந்தியா நாடு கடத்துமா?
குற்றவாளிகளை பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்கெனவே நடைமுறையில் இருப்பதாகவும் எனவே ஹசீனாவை ஒப்படைப்பது இந்தியாவின் கடமை என்றும் வங்கதேச அரசு தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் கடந்தாண்டு ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 5 வரை அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 1,400 பேர் கொல்லப்பட்டிருந்தனர். 22 ஆயிரம் பேர் காயமடைந்திருந்தனர். இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என தீர்ப்பளித்த சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஹசீனாவின் செயல் மனித குலத்திற்கே எதிரானது எனவும் தீர்ப்பில் கூறப்பட்டது. ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை என தீர்ப்பளிக்கப்பட்டதை எதிர்த்து வங்கதேசம் முழுவதும் கடும் பதற்றம் எழுந்துள்ளது. பல இடங்களில் ஹசீனா ஆதரவாளர்கள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரத்தில், கலவரத்தில் ஈடுபடுபவர்களை கண்டவுடன் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மறுபுறம், தனக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை அரசியல் உள்நோக்கம் கொண்டது எனவும், தீர்ப்பு என்ன என முடிவு செய்த பின்னரே வழக்கு விசாரணையே தொடங்கப்பட்டதாகவும், இந்த வழக்கு விசாரணை முழுவதும் ஒருதலைபட்சமாக இருந்ததாகவும் தனது தரப்பு வாதங்களை தெரிவிக்க போதிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்றும் ஹசீனா தெரிவித்துள்ளார். இதற்கிடையே, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என மத்திய அரசுக்கு வங்கதேச அரசு கடிதம் எழுதியுள்ளது. மனிதகுலத்திற்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்ட நபருக்கு தஞ்சம் அளித்திருப்பது நட்புக்கும் நீதிக்கும் எதிரானது என வங்கதேச வெளியுறவு அமைச்சகத்தின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகளை பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்கெனவே நடைமுறையில் இருப்பதாகவும் எனவே ஹசீனாவை ஒப்படைப்பது இந்தியாவின் கடமை என்றும் வங்கதேச அரசு தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் ஏற்பட்ட கலவரத்திற்குப் பிறகு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசத்தின் கடிதத்திற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, ’ஒரு நெருங்கிய அண்டை நாடாக, வங்காளதேச மக்களின் நலன்களுக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது, அதில் அமைதி, ஜனநாயகம், உள்ளடக்கம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவை அடங்கும். அந்த நோக்கத்திற்காக அனைத்து பங்குதாரர்களுடனும் நாங்கள் எப்போதும் ஆக்கப்பூர்வமாக ஈடுபடுவோம்’ எனத் தெரிவித்துள்ளது.
ஆனால், 2013ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட தற்போதைய ஒப்படைப்பு ஒப்பந்தத்தின்கீழ், நாடுகடத்தப்பட்ட ஒரு தலைவரை ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை, ‘அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டது’ என்று கருதப்பட்டால் அது நிராகரிக்கப்படலாம். ஒப்படைப்பு கோரிக்கையை மறுப்பதற்கான அனைத்து காரணங்களையும் பட்டியலிடும் ஒப்பந்தத்தின் பிரிவு 6இன்படி, குற்றச்சாட்டுகள் உண்மையான நோக்கத்துடன் செய்யப்படாவிட்டால் அல்லது நீதியின் நலன்களில் நல்ல நம்பிக்கையுடன் இல்லாவிட்டால் ஒரு கோரிக்கை நிராகரிக்கப்படலாம் என்றும் அது குறிப்பிடுகிறது.

