”கடவுள் என் உயிரை காப்பாற்றியது இதற்காகத்தான்” - பதவியேற்புக்குப் பின் டொனால்டு ட்ரம்ப் மாஸ் உரை!
அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் இன்று பதவியேற்றார். அவருக்கு பீரங்கிக் குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. அவருக்குப் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய பிரதமர் மோடியும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தன்னுடைய வாழ்த்துச் செய்தியில், “மீண்டும் நெருக்கமாக நண்பர் ட்ரம்புவுடன் இணைந்து பணியாற்ற காத்துக் கொண்டிருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தனது முதல் பேச்சைத் தொடங்கினார். அப்போது பேசிய அவர், “ஜனவரி 20ஆம் தேதிதான் அமெரிக்கவுக்கு விடுதலை நாள். அமெரிக்காவின் பொற்காலம் தொடங்குகிறது. இன்று முழுவதும் உலகம் மதிக்கப்படும் அமெரிக்கா மாறும். அமெரிக்காவின் நலனுக்காகத்தான் கடவுள் என் உயிரைக் காப்பாற்றினார். இதுவரை இல்லாத அமெரிக்காவைக் கட்டமைப்பேன்
என்னுடைய உயிர் ஒரு காரணத்திற்காகவே காக்கப்பட்டுள்ளது. எப்படியோ நான் உயிர் பிழைத்துவிட்டேன். அமெரிக்காவை சிறந்ததாக மாற்றுவதற்காகவே கடவுள் என்னுடைய உயிரை காப்பாற்றியுள்ளார்." என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “எனது வெற்றி அமெரிக்கா முழுமைக்கும் ஆனது. அமெரிக்கர்களின் பாதுகாப்பு மீட்டெடுக்கப்படும். அமெரிக்காவுக்கே முதலில் முன்னுரிமை என்பதைச் செயல்படுத்துவேன். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவுகள் கையெழுத்திட உள்ளேன்” என்று கூறியதோடு, “ஜோ பைடனால் எல்லைப் பிரச்னைகளைத் தீர்க்க முடியவில்லை. இயற்கை பேரிடர்களை பைடன் அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை” என்று விமர்சனமும் செய்தார்.
ட்ரம்ப் பேச்சின் மேலும் சில முக்கிய அம்சங்கள்:-
சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவர்.
துப்பாக்கிக் கலாசாரத்துக்கு முடிவு கட்டுவேன்.
உற்பத்தி மையமாக அமெரிக்கா மீண்டும் உருவாகும்.
சட்டவிரோத அகதிகளின் ஊடுருவல்கள் உடனடியாக நிறுத்தப்படும்.
அமெரிக்காவில் பேச்சுரிமைக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படும்.
அமெரிக்காவில் தென் எல்லைப் பகுதிகள் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுகிறது.
மின்சார வாகனங்கள் கட்டாயம் என்ற உத்தரவு திரும்பப் பெறப்படும். மக்கள் விரும்பிய வாகனங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சட்டத்திற்கு உட்படாத குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அமெரிக்காவில் ஆண் - பெண் என்ற இரண்டு பாலினம் மட்டுமே இருக்கும்.
அமெரிக்கா மீண்டும் பணக்கார நாடாக மாறும்.
செவ்வாய்க் கிரகத்தில் அமெரிக்கா கொடி பறக்கும்” என உரையாற்றினார். அவர் ஒவ்வொரு அறிவிப்புக்கும் கைதட்டல்கள் விண்ணைப் பிளந்தது.