எகிப்து மன்னரின் கல்லறையில் இருந்து புற்றுநோய்க்கான மருந்து.. வரலாறு என்ன சொல்கிறது?
எகிப்து மன்னரின் கல்லறையில் இருந்து புற்றுநோய்க்கான புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், சுவாரஸ்யமான ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர். ஆச்சரியப்படுத்தும் இந்த ஆராய்ச்சியின் கதையை தற்போது பார்க்கலாம்.
சுமார் மூவாயிரத்து 300 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தை ஆண்ட மன்னன் துட்டன்காமனின் தங்க கல்லறையை கடந்த 1920ஆம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். அவற்றை ஆய்வு செய்த தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் சிலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழக்க, `இது கல்லறையை திறந்த சாபத்தால் ஏற்பட்ட விளைவு’ என அப்போது பீதி கிளம்பியது. ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த கல்லறையை திறந்தபோது அதிலிருந்த பூஞ்சை தாக்குதலால் தான் அவர்கள் உயிரிழந்தார்கள் என பின்வந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதனாலேயே அந்த பூஞ்சைக்கு "ஃபாரோஸ் சாபம்" என... அதாவது `அஸ்பெர்கிலஸ் ஃபிளேவஸ் பூஞ்சை என்ற பெயரை விஞ்ஞானிகள் சூட்டினர்.
இந்த நிலையில்தான், இந்த பூஞ்சையில் இருந்து புற்றுநோயை தடுப்பதற்கான அதிசிறந்த மருந்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுடித்துள்ளனர். அதாவது இந்த பூஞ்சையில் உள்ள அஸ்பெரிஜிமைசின்ஸ் (asperigimycins) எனப்படும் நான்கு மூலக்கூறுகளை விஞ்ஞானிகள் பிரித்தெடுத்தனர். இந்த மூலக்கூறுகளை ஆய்வு செய்தபோது, இரத்தப் புற்றுநோய் மற்றும் எலும்பு மஜ்ஜைகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் `லுகேமியா (leukemia) புற்றுநோய் செல்கள் பெருகாமல் தடுப்பதை கண்டறிந்தனர். குறிப்பாக, இந்த மூலக்கூறுகள் `லிபிட்ஸ்’ (lipids) எனும் கொழுப்பு மூலக்கூறுகளுடன் கலக்கும்போது, இன்சுலின் போன்று தற்போது பயன்படுத்தப்படும் புற்றுநோய் மருந்துகளுக்கு இணையாக செயல்படுவதை கண்டுபிடித்தனர்.
மேலும், இதில் குறிப்பிடத்தக்க பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்பதையும் உறுதி செய்தனர். முதற்கட்டமாக இந்த மருந்தை விலங்குகள் மீது சோதித்து பார்த்த பிறகு, மனிதர்களின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் எனவும், இது எதிர்காலத்தில் புற்றுநோய்க்கு சிறந்த மருந்தாக இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.