ஆண்டுதோறும் 3.5 கோடி பேருக்குப் புற்றுநோய்.. காரணம் என்ன?
2050-ஆம் ஆண்டிற்குள் புற்றுநோய் பாதிப்புகள் 75 சதவீதம் அதிகரிக்கவுள்ள நிலையில், உலகளவில் 10 கோடி பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் என்றும், இதன் விளைவாக உலகம் புற்றுநோய் சிகிச்சைப் பணியாளர்கள் தொடர்பான நெருக்கடியை எதிர்கொள்ளும் என்றும் 'லான்செட்' (Lancet) இதழின் புதிய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
லான்செட் (Lancet) புற்றுநோய் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய உலகளாவிய ஆய்வு அறிக்கையின்படி, உலகளவில் அடுத்த 25 ஆண்டுகளில் ஆண்டுதோறும் சுமார் 3.5 கோடி பேர் புற்றுநோயால் பாதிக்கப்படலாம் என்றும், 1.9 கோடி பேர் இதனால் உயிரிழக்கக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய நிலையைவிட 75 சதவீதம் கூடுதலாகும்.
புற்றுநோய் பாதிப்புகள் இவ்வாறு வேகமாக அதிகரிக்கும் அதேவேளையில், வரும் 2050ஆம் ஆண்டுக்குள் உலகளவில் 10 கோடி புற்றுநோய் சிகிச்சை ஊழியர்களின் பற்றாக்குறை ஏற்படும் என இந்த ஆய்வு எச்சரிக்கிறது. குறிப்பாக, செவிலியர்கள் மற்றும் சமூக சுகாதாரப் பணியாளர்களில் 6.8 கோடிப் பேர் வரையிலும், நோய் கண்டறியும் பிரிவில்1.6 கோடிப் பேர் வரையிலும் தட்டுப்பாடு நிலவக்கூடும்.
புதிதாகக் கண்டறியப்படும் புற்றுநோய்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவை ஏழை மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளிலேயே ஏற்படும். மேலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைப்பவர்களின் விகிதம் ஆப்பிரிக்காவில் மிகக் குறைவாக 34 சதவீதமாகவும், ஆசியாவில் 39 சதவீதமாகவும் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடியைத் தவிர்க்க, சர்வதேசப் புற்றுநோய்ப் பணியாளர்களுக்கான கட்டமைப்பில் தற்போதே முதலீடு செய்வது அவசியம். இதன்மூலம் 2030 முதல் 2050க்குள் 17 கோடி உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என்றும், நாம் முதலீடு செய்யும் ஒவ்வொரு டாலருக்கும் 4 டாலர் அளவுக்குப் பொருளாதார பலன்கள் கிடைக்கும் என்றும் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

