ஈரப்பத வெப்ப அலை தெரியுமா..? வியர்வை வெளியேறாவிட்டால் ஆபத்து.. இந்தியர்களுக்கு எச்சரிக்கை!
வெறும் வெப்பநிலையை விட காற்றில் உள்ள ஈரப்பதம் சேரும்போது உருவாகும் ‘ஈரப்பத வெப்ப அலை’ மனித உயிருக்கு கடும் ஆபத்தாகும் என ஆய்வு எச்சரிக்கிறது. 32 டிகிரியைத் தாண்டும் ஈரப்பத வெப்பநிலையில், ஆரோக்கியமானவர்களுக்குக் கூட 6 மணி நேரத்துக்கு மேல் தாங்க முடியாது. 34 டிகிரி வெப்பத்துடன் 70% ஈரப்பதம் இருந்தால், 42 டிகிரி வெயிலைப் போல உணரப்படும் அபாயம் விளக்கப்படுகிறது.
வெறும் வெப்பநிலையை விட, காற்றில் உள்ள ஈரப்பதம் வெப்பத்துடன் சேரும்போது அது மனித உயிருக்கு பெரும் ஆபத்தாக முடிகிறது. பொதுவாக வெயில் அடிக்கும்போது வியர்வை வெளியேறி நம் உடலைக் குளிர்விக்கும். ஆனால் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருந்தால், வியர்வை வெளியேறாது. இதனால் உடல் வெப்பநிலை உயர்ந்து, வெப்பத் தாக்கு ஏற்பட்டு மனிதர்கள் உயிரிழக்க நேரிடுகிறது.
அறிவியலாளர்களின் கூற்றுப்படி, இந்த ஈரப்பத வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸைத் தாண்டினால், ஆரோக்கியமான மனிதர்களால் கூட 6 மணி நேரத்துக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது. உதாரணமாக, 34 டிகிரி வெப்பம் நிலவும்போது காற்றில் 70 சதவீதம் ஈரப்பதம் இருந்தால், நாம் 42 டிகிரி வெயிலை உணர நேரிடும். இந்த ஆய்வின் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால், கோடைக் காலத்தை விட அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான காலத்தில்தான் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்.
இதற்குச் சான்றாக, 2024 அக்டோபரில் சென்னை மெரினாவில் நடந்த விமானப்படை சாகச நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட 5 உயிரிழப்புகளுக்கு இந்த ஈரப்பத வெப்பநிலையே காரணம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தமிழகம் நீண்ட கடற்கரையைக் கொண்டிருப்பதால் இங்கு ஈரப்பதம் எப்போதும் அதிகமாகவே இருக்கும். எனவே, இனிவரும் காலங்களில் பொதுக்கூட்டங்கள் மற்றும் திருவிழாக்களுக்கு அனுமதி அளிக்கும்போது, வெறும் வெப்பநிலையை மட்டும் பார்க்காமல் ஈரப்பத வெப்பநிலையையும் கணக்கில் கொள்வது அவசியம் என இந்த ஆய்வு எச்சரிக்கிறது.

