அஜா்பைஜான் விமான விபத்து| ரஷ்யா காரணமா? குற்றஞ்சாட்டும் உக்ரைன்!
அஜா்பைஜான் ஏா்லைன்ஸுக்குச் சொந்தமான எம்ப்ரேயர் 190 என்ற விமானம் ஒன்று, 67 பேருடன் தலைநகா் பாக்குவில் இருந்து ரஷ்யாவுக்கு கடந்த 25ஆம் தேதி புறப்பட்டது. கஜகஸ்தானில் உள்ள அக்தெள நகர விமான நிலையம் அருகே அது பறந்துகொண்டிருந்தபோது அதை அவசரமாக தரையிறக்க விமானிகள் முயன்றனா். ஆனால், தரையிறங்குவதற்கு முன்னதாக அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி வெடித்தது. இதில் 38 பேர் உயிரிழந்தனர். மற்ற 29 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். பறவைகள் மோதியதால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது.
ஆனால், கஜகஸ்தானைச் சோ்ந்த விமானவியல் நிபுணரான செரீக் முக்திபயெவ், ”விமானம் பிரச்னையில் சிக்கியபோது அது மிக உயரத்தில் பறந்துகொண்டிருந்தது. அவ்வளவு உயரத்தில் அதன்மீது பறவைகள் மோதுவதற்கான சாத்தியம் மிக மிகக் குறைவு” எனத் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய வான்பாதுகாப்பு ஏவுகணைதான் அந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து உக்ரைன் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவா் ஆண்ட்ரி கோவலென்கொ, விபத்துக்குள்ளான விமானத்தின் உள்பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை அதற்கு ஆதாரமாக அவா் குறிப்பிட்டாா். இதே குற்றச்சாட்டை, அமெரிக்காவைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும் முன்வைத்துள்ளார்.
இதற்கிடையே, அஜா்பைஜான் பயணிகள் விமானத்தை உக்ரைனின் ட்ரோன் என்று தவறாகக் கருதி தங்கள் நாட்டு வான்பாதுகாப்பு தளவாடம் அதை இடைமறித்து அழித்திருக்கலாம் என்று ரஷ்ய ஊடகங்களும் தெரிவித்துள்ளன.
ஆனால், இதை ரஷ்யா விமர்சித்துள்ளது. ”அஜா்பைஜான் விமானத்தை தங்கள் வான்பாதுகாப்பு ஏவுகணைதான் சுட்டுவீழ்த்தியது என்று விசாரணை நிறைவடைவதற்கு முன்னரே உக்ரைன் கூறுவது தவறு” என்று ரஷ்யா விமா்சித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய அதிபா் மாளிகை செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ், “கஜகஸ்தானில் அஜா்பைஜான் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. அந்த விசாரணை நிறைவடைவதற்கு முன்னரே அது குறித்து கருத்து கூறுவது தவறான செயலாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
கஜகஸ்தானும் இதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு நாடாளுமன்றத் தலைவா் அஷ்மிபயெவ் மாவ்லென், ”விமான விபத்து குறித்த உண்மைகளை மறைக்க அஜா்பைஜான், ரஷியா, கஜகஸ்தான் ஆகிய எந்தவொரு நாடுமே முயலவில்லை. உண்மை கண்டறியப்பட்டபிறகு அது பொதுமக்கள் முன்பு நிச்சயம் வெளியிடப்படும்” என்று உறுதியளித்தாா். ஆனால், உக்ரைனின் குற்றச்சாட்டை டிமித்ரி பெஸ்கோவ், அஷ்மிபயெவ் மாவ்லென் ஆகிய இருவருமே திட்டவட்டமாக மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.