\
AI Infrastructure Threatens Environment, UN Report Warns
Ai UN University Institute for Water

60 கோடி மக்களின் ஓராண்டு தண்ணீர்; ஏஐ தொழில்நுட்பத்தால் குடிநீர் பஞ்சம் - ஐநா எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமான ஏஐ உலகை ஆட்டுவித்துவரும் நிலையில், அதன் பின்னணியில் உள்ள தரவு மையங்கள் எனப்படும் டேட்டா சென்டர்களால் சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்படும் என ஐநா எச்சரித்துள்ளது.
Published on

ஐ.நா. பல்கலைக்கழகத்தின் புதிய அறிக்கையின்படி, ஏஐ பயன்பாட்டால் மின்சார நுகர்வு, கார்பன் உமிழ்வு மற்றும் நீர்ப் பயன்பாடு ஆகியவை கவலைக்கிடமான அளவில் உயர்ந்து வருகின்றன. ஏஐயிடம் நாம் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பின்னணியில், பல லிட்டர் குடிநீர் வீணடிக்கப்படுவதாக அந்த அறிக்கை கூறுகிறது. தரவு மையங்களில் உள்ள சர்வர்களின் வெப்பத்தைத் தணிக்கச் சுத்தமான குடிநீர் பயன்படுத்தப்படுகிறது. அதன்படி, கடந்த ஆண்டில் மட்டும் தரவு மையங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட குடிநீரின் அளவு, 60 கோடி மக்கள் ஓர் ஆண்டு முழுவதும் பயன்படுத்தும் தண்ணீருக்குச் சமமாகும்.

இது சுமார் 18 லட்சம் ஒலிம்பிக் நீச்சல் குளங்களை நிரப்பும் அளவுக்கு இணையானது என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மின்சார நுகர்வைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டில் உலகளாவிய தரவு மையங்கள் சுமார் 448 டெராவாட் மணி மின்சாரத்தைப் பயன்படுத்தியுள்ளன. இந்த அளவை ஒரு நாட்டின் நுகர்வோடு ஒப்பிட்டால், உலகிலேயே 11ஆவது மிகப் பெரிய மின்சார நுகர்வு நாடாக இந்தத் தரவு மையங்கள் விளங்கும். இந்த மின்சாரம், ஆப்பிரிக்காவில் வாழும் 130 கோடி மக்களின் 2.6 ஆண்டுகால வீட்டு மின்சாரத் தேவைக்குச் சமமானதாகும்.

AI Infrastructure Threatens Environment, UN Report Warns
"ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதல்.." ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு.. பரபரப்பில் மத்திய கிழக்கு!

2023இல் 18,900 கோடி டாலராக இருந்த உலக ஏஐ சந்தை, 2033க்குள் 5 ட்ரில்லியன் டாலராக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், வரும் 2030ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐநா எச்சரித்துள்ளது. சமீபத்தில் கூகுள், ரிலையன்ஸ் நிறுவனங்களின் தரவு மையங்கள் ஆந்திராவுக்குச் சென்றதால் தமிழ்நாட்டுக்குப் பின்னடைவு என விமர்சனம் எழுந்தது.

ஆனால், சுற்றுச்சூழல் மற்றும் குடிநீர்த் தேவையின் அடிப்படையில் பார்த்தால், இது தமிழ்நாட்டுக்குச் சாதகமான ஒன்றுதான் என்றும், இதனால் கோடிக்கணக்கான லிட்டர் நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும் சுற்றுச்சூழல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க நாடாளுமன்றத்திலும் கலிபோர்னியா மாகாணத்தின் நிலத்தடி நீர்மட்டப் பாதிப்பு குறித்துப் பேசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏஐ மனிதர்களின் வாழ்க்கையை எளிதாக்கினாலும், அதன் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து உலக நாடுகள் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என ஐநா வலியுறுத்தியுள்ளது.

AI Infrastructure Threatens Environment, UN Report Warns
உலகின் நீருக்கடியில் இயங்கும் முதல் தரவு மையம்.. சீனாவில் உருவாக்கம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com