"ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதல்.." ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு.. பரபரப்பில் மத்திய கிழக்கு!
ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா இன்றிரவு மிகப்பெரிய அளவில் ராணுவத் தாக்குதலைத் தொடுக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
செய்தியாளர்: விக்கி
அதிபர் ட்ரம்ப் தனது பதிவில் ஈரானின் கடற்படை, விமானப்படை, ரேடார் கட்டமைப்புகள், விமான எதிர்ப்புப் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட அனைத்துப் பாதுகாப்புப் பிரிவுகளும் ஏற்கெனவே முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன. ஈரானின் பெரும்பாலான தாக்குதல் திறன்களும் தற்போது இல்லாமல் போய்விட்டன. இந்தச் சூழலில், அமெரிக்க ராணுவம் இன்றிரவு ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதலை நடத்தவுள்ளது. மிக விரைவில், ஈரானுக்குச் சொந்தமான 'கார்க் தீவு' மற்றும் பிற எண்ணெய் உள்கட்டமைப்புப் பகுதிகளை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.
இதன்மூலம் ஈரானின் ஒட்டுமொத்த எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தையையும் அமெரிக்கா தனது முழு ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும். ஏற்கெனவே வெனிசுலா நாட்டின் எண்ணெய் சந்தையை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த நடைமுறை, வெனிசுலா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்குமே மிகச் சிறந்த பலனை அளித்து வருவதைப் போல, ஈரானிலும் இந்த நடவடிக்கை அமையும் என்று ட்ரம்ப் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்கு ஆசியப் பகுதியில் ஏற்கெனவே அமெரிக்கா நடத்திய தாக்குதலால் பதற்றம் நிலவி வரும் நிலையில், அதிபர் டிரம்பின் இந்த நேரடி எச்சரிக்கை உலகரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மீது, பிப்ரவரியில் இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல் நடத்தின. இதனால், உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடக்கும் கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், உலகம் முழுதும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது.
ஒரு மாதம் தாக்குதல் தொடர்ந்த நிலையில், கடந்த ஏப்ரலில் அமெரிக்கா - ஈரான் இடையே தற்காலிக போர்நிறுத்தம் ஏற்பட்டது. முதல் கட்ட பேச்சு தோல்வி அடைந்த நிலையில், இரண்டாம் கட்ட பேச்சுக்கள் தற்போது வரை இழுபறியாக இருந்து வரும் நிலையிலேயே இந்த எச்சரிக்கை வந்துள்ளது. இதற்கிடையே இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே மோதல் போக்கு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

