தூய்மைப் பணியாளர் பத்மாவுக்கு தங்க சங்கிலி அணிவித்து பாராட்டிய ரஜினி! | Rajinikanth
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தூய்மைப் பணியாளர் பத்மாவை நேர்மைக்காக நேரில் அழைத்து பாராட்டி, தங்க சங்கிலி அணிவித்தார். பத்மா, குப்பையில் கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரது நேர்மையை முதல்வர் ஸ்டாலினும் பாராட்டியிருந்தார். இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் திறமையாளர்களை நேரில் அழைத்து பாராட்டுவது, ஒரு படம் சிறப்பாக இருந்தால் நேரில் அழைத்து பரிசளிப்பது என்பது மிக வழக்கமாக நடக்கும் ஒன்று. சினிமாவை தாண்டி நல்ல விஷயங்களை செய்யும் நபர்களையும் நேரில் அழைத்து பாராட்டுகிறார் ரஜினிகாந்த்.
மதுரை வண்டியூர் பகுதியில் அல்போன்ஸ் என்பவர் ‘மாந்தோப்பு பரோட்டா கடை’ என்ற பெயரில் ரூ.5க்கு பரோட்டா விற்பனை செய்து வருகிறார். விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள போதிலும், தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் 5 ரூபாய்க்கே பரோட்டா விற்பனை செய்து வருகிறார். ரஜினியின் தீவிர ரசிகரான அல்போன்ஸ், தன்னுடைய கடையின் பெயர் பலகையில் ரஜினியின் படத்தையும் வரைந்து வைத்துள்ளார். இவர் பற்றி அறிந்த ரஜினிகாந்த் நேரில் அழைத்துப் பாராட்டினார். பாராட்டியதோடு ஒரு தங்கச் சங்கிலியையும் அவருக்கு பரிசாக வழங்கியிருந்தார் ரஜினி.
அதைத் தொடர்ந்து, இன்று தூய்மைப் பணியாளர் பத்மாவை நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்துப் பாராட்டியிருக்கிறார். தூய்மைப் பணியாளராக இருக்கும் பத்மா, கடந்த ஜனவரி 11-ஆம் தேதி சென்னை தி நகரில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது குப்பையில் 45 சவரன் தங்க நகைகளைக் கண்டெடுத்தவர், அதை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இவரது நேர்மையைப் பலரும் பாராட்டியிருந்தனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் பத்மாவை நேரில் அழைத்து, அவரது நேர்மையைப் பாராட்டியதோடு 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கியிருந்தார். அதைத் தொடர்ந்து, இன்று ரஜினி அவரை நேரில் அழைத்து பாராட்டி, தங்க சங்கிலி அணிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் பரவி வருகின்றன.

