பூமியை விட்டு விலகும் நிலா... எதிர்காலத்தின் நிலை என்ன? ஒரு நாளுக்கு 24 மணி நேரம் என்பது மாறிவிடுமா?

பூமிப்பந்தின் துணைக்கோளான நிலவானது நாளுக்கு நாள் பூமியை விட்டு சற்று விலகி வருகிறது. இதனால் பூமி சுழலும் வேகத்தில் மாறுதல்கள் நடக்கும். இதனால் என்ன விளைவுகள் ஏற்படும் உள்ளிட்ட விவரங்களை இந்த தொகுப்பில் காணலாம்.
earth and moon
earth and moonfile image

பூமியின் சுழற்சியில் முக்கிய பங்காற்றும் நிலவானது ஆண்டுதோறும் சராசரியாக 3.78 செ.மீ என்ற அளவில் பூமியை விட்டு விலகிச்சென்று கொண்டே இருக்கிறது. பூமியின் துணைக்கோளான இது, பூமியை விட்டு விலகுவதால் ஏற்படும் விளைவுகள், எதிர்கால பாதிப்புகள் குறித்த தகவல்களை பார்க்கலாம்.

சோவியத், அமெரிக்கா போன்ற நாடுகள் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே நிலவுக்கு விண்கலங்களை அனுப்பியுள்ளன. 1969ம் ஆண்டு அப்பல்லோ 11 விண்கலம், 1970ல் லூனா 17, 1971ல் அப்பல்லோ 14, 15 மற்றும் 1973ல் லூனா 21 ஆகிய விண்கலங்கள் நிலவில் தரையிறங்கின.

earth and moon
நிலவில் நீர் ஆதாரம் உருவாக இதுதான் காரணமா..! ஆய்வுக்கு உதவிய சந்திரயான் 1 மூலம் கிடைத்த தகவல்

இந்த பயணங்களின்போது, நிலவின் மேற்பரப்பில் Retroreflector எனப்படும் ஒருவகையான கண்ணாடி பொருளை பதித்தார்கள். இதை வைத்துதான் நிலவுக்கும் பூமிக்குமான தொலைவை விஞ்ஞானிகள் அளக்கிறார்கள் என சொல்லப்படுகிறது. அது எப்படி சாத்தியம் என்ற கேள்வி வரலாம்.

பூமியிலிருந்து நிலவு நோக்கி லேசர் ஒளிக்கற்றைகளை விஞ்ஞானிகள் அனுப்புவார்கள். அந்த லேசர் ஒளிக்கற்றை நிலாவிலுள்ள கண்ணாடி பிரதிபலிப்பானில் பட்டு பிரதிபலித்து அது மீண்டும் பூமியை நோக்கி திரும்பி வரும்.

லேசர் கற்றை நிலவுக்கு சென்று திரும்பும் நேரத்தை வைத்து, இரண்டுக்கும் இடையேயான தூரமானது அளவிடப்படுகிறது.

பூமியின் மீது நிலா செலுத்தும் ஈர்ப்பு விசையின் கவர்ச்சியால், இங்குள்ள கடலை பிடித்து அது இழுக்கிறது. இந்த கவர்ச்சி விசைதான் பூமி சுற்றும் வேகத்தை பாதிக்கிறது. பூமி தன்னத்தானே சுற்றுகையில், நிலாவும் அதை பிடித்து இழுப்பதால் பூமியின் சுழற்றி வேகம் மெல்ல மெல்ல குறைந்து வந்தது. இந்நிலையில், பூமியிலிருந்து நிலவானது சிறுக சிறுக விலகி செல்வதால், பூமி தன்னை சுற்றிக்கொள்ளும் நேரம் கூடிக்கொண்டே செல்கிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

அதாவது 1,600ம் ஆண்டில் இருந்து தற்போதுவரை ஒப்பிட்டு பார்த்தால், சராசரியாக ஒரு நாளின் நீளம் 1.09 மில்லி விநாடி கூடியுள்ளதாக தெரிகிறது. சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக பூமியின் சுழற்சி வேகம் வெறும் 8 மணிநேரம் என்பதும், நிலவு உருவான பிறகு அதன் வேகம் குறைந்தது என்றும் தெரிவிக்கும் ஆய்வாளர்கள், 320 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக 13 மணி நேரத்தில் பூமி சுழன்றதாகவும், 140 கோடி ஆண்டுகளுக்கு முன் 18 மணி நேரத்தில் சுழன்றதாகவும் தெரிவிக்கின்றனர்.

சுமார் 40 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக 22 மணி நேரத்தில் பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்ட நிலையில், அது சிறுக சிறுக அதிகரித்து தற்போது 24 மணி நேரத்தில் வந்து நிற்கிறது.

பூமி நிலவை விட்டு இப்படி விலகி வருவதால், பூமியின் சுழற்றி வேகம் மேலும் குறைந்து சுமார் 5,000 கோடி ஆண்டுகளுக்கு பிறகு பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ள 50 நாட்களை எடுத்துக்கொள்ளும் என்று கணித்துள்ளனர் விஞ்ஞானிகள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com