சிபிஐ(எம்) | திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்பது ஏன்? - கே. பாலகிருஷ்ணன் விளக்கம்.!
சிபிஐ(எம்) முன்னாள் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், திமுக கூட்டணியில் அதிக இடங்களை கேட்பது குறித்து விளக்கமளித்தார். மக்கள் பிரச்சனைகளை அழுத்தமாக பேச சட்டமன்றத்தில் அதிக உறுப்பினர்கள் தேவை என்பதால், இரட்டை இலக்கத்தில் இடங்களை கேட்கிறோம் என அவர் கூறினார். பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், 20-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் மிகப் பெரிய கூட்டணி அமைத்து ஆளும் திமுக தேர்தலை சந்திக்கவிருக்கிறது. இக்கூட்டணி தொகுதிப்பங்கீடு பேச்சு வார்த்தை கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ், மதிமுக உட்பட பல கட்சிகளுக்குக்கான தொகுதிப்பங்கீட்டைத் திமுக முடித்திருக்கிறது. ஏற்கனவே, கூட்டணியில் நிறைய கட்சிகள் உள்ளதால், குறைவான தொகுதிகளே ஒதுக்கப்படும் என முதல் நாள் தொகுதிப் பங்கீட்டின் போது திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது திமுக.
இந்த சூழலில் தான், மதிமுக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளுக்கு கடந்த தேர்தலைவிட குறைவான தொகுதிகளையே ஒதுக்கியிருக்கிறது திமுக. ஆனாலும், தவெகவுடன் கூட்டணி வைக்கப்போவதாக தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகள் கூறிய நிலையில், அக்கட்சிக்கு 3 தொகுதிகளை அதிகமாக அதாவது, 28 தொகுதிகளை ஒதுக்கி தொகுதிப்பங்கீட்டை முடித்திருக்கிறது. இந்த சூழலில், சிபிஐ(எம்), சிபிஐ, விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தற்போது தொடங்கியிருக்கிறது.
குறிப்பாக, சிபிஐ(எம்) கட்சியுடன் ஏற்கனவே இரு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கும் நிலையில், இன்னும் எந்த உடன்பாட்டையும் எட்டவில்லை. அக்கட்சியின் தலைவர்கள் இரட்டை இலக்கங்களில் தொகுதிகளை கேட்கின்றனர். ஆனால், கடந்த தேர்தலை விட 2 இடங்களை குறைவாகவே திமுக தர முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தான் செய்தியாளர்களை சந்தித்துப்பேசியிருக்கும் சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், காங்கிரஸுக்கு 3 தொகுதிகளை அதிகமாக்கி கொடுத்து விட்டு தங்களுக்கு குறைப்பது நியாமல்ல எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் நாங்கள் அதிக இடங்களை கேட்பது ஏன் என்பது குறித்து சிபிஐ(எம்) முன்னாள் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷணன் விளக்கமளித்துப் பேசியிருக்கிறார்.
விழுப்புரம் அருகேயுள்ள கண்டாச்சிபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க நிதியளிப்பு பிரச்சார பொதுக்கூட்டம் அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. அப்போது மேடையில் பேசிய பாலகிருஷ்ணன், “திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதிகமான எண்ணிக்கையில் சட்டமன்றத்திற்கு சென்றால் தான் மக்கள் பிரச்சனையை அழுத்தமாக பேச முடியும். மக்களின் பிரச்சனையைப் பேச அதிக நேரமும் கிடைக்கும். அதற்காக, இரட்டை இலக்கத்திலாவது சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேவை எனவே தான் அதிக இடங்களை கேட்கிறோம். பேச்சு வார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்படும் எனத் தெரிவித்திருக்கிறார்.

