"திமுக மிரட்டியதால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை.." - தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா
திமுகவின் மிரட்டலால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டினார். திமுகவுக்கு எதிராக விஜய் மனவலிமையுடன் நிற்பதாகவும், மாற்றத்தை கொண்டு வருவோம் என கூறிய பலரும் திமுகவுடன் இணைந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 3 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான (Caste-survey) அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும், போதைப் பொருட்களையும் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு கண்டனம், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்கும் வகையில், ஜனநாயகமற்ற முறையிலான வழிகாட்டு நெறிமுறைகளைத் திரும்பப் பெறவேண்டும் என்ற 3 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ரஜினியை மிரட்டியது திமுக..
சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, “தமிழ்நாட்டில் எம்ஜிஆருக்கு பிறகு பிரபலமான தலைவராக ரஜினி அரசியலுக்கு வர நினைத்தார். மொத்த சிஸ்டத்தையும் மாற்றி, நல்லது பண்ண நினைத்தார். ஆனால் திமுக குடும்பம் அவருக்கு மிரட்டல் விடுத்து அரசியலுக்கு வராமல் பார்த்துகிட்டாங்க. ஆனால் அவர் இப்போ என்ன பன்றார் ரெட்ஜெயின்ட் படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். இது ரஜினியை விமர்சிப்பதற்காக சொல்லவில்லை, ஆனால் இவற்றை எல்லாம் கடந்து திமுகவுக்கு எதிராக விஜய் நிற்கிறார் என்றால் நம் தலைவர் விஜய்க்கு மன வலிமை அதிகம்.
அதேபோல மாற்றத்தை கொண்டு வருவோம் என்று தனித்து போட்டியிட்டு வந்த வைகோ, திமுகவுடன் கூட்டணி வைத்தார். இன்றைக்கு அந்தக் கட்சி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட நான்கு தொகுதியில் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்று கூறிய கமல்ஹாசன் டிவி எல்லாம் உடைத்தார், கடைசியில் திமுக கூட்டணியில் இணைந்து விட்டார். மூன்று முறை முதல்வராக இருந்த ஓ பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்து விட்டார். ஆனால் நம்முடைய தலைவர் மட்டும்தான் மன உறுதியுடன் களத்தில் நிற்கிறார்” என பேசியுள்ளார்.

