பொருளாதார ஆய்வறிக்கை என்பது என்ன? கடன் வாங்குவது எதனால்? - விரிவாக விளக்கும் ஜெயரஞ்சன்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் நாளை (மார்.14) தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்கிறார். இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரியில் நடந்த நிலையில், நாளை சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது.
தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட 2024-25 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு, பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிடுவது இதுவே முதல்முறையாகும். இந்த பொருளாதாரா ஆய்வறிக்கையில் தனிநபர் வருமானம் தேசிய சராசரியை விட 1.64 மடங்கு அதிகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்தப் பின்னர் ஜெயரஞ்சன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பட்ஜெட்டில் வழக்கமாக வருமானம், செலவு, ஒன்றிய அரசிடமிருந்து கிடைத்த பணம் உள்ளிட்டவைகள் தான் விவாதிக்கப்படும். ஆனால், பொருளாதார ஆய்வறிக்கை என்பது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் கடந்த 5 ஆண்டுகளில் என்னென்ன மாற்றங்களைச் சந்தித்துள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து கட்டுரையாகத் தொகுக்கப்பட்டிருக்கும்.
தமிழ்நாட்டின் பொருளாதாரம் விவசாயத்தை விட்டு நகர்ந்து விவசாயமல்லாத பொருளாதாரமாக மாறிவிட்டது. இதன்காரணமாக, கால மாற்றங்களால் விவசாயத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் நமது பொருளாதாரத்தை பாதிக்காது. ஆனால், சர்வதேச அளவில் நடக்கும் நிகழ்வுகள் நமது பொருளாதாரத்தை பாதிக்கும். உதாரணத்திற்கு, இந்தியாவிலேயே அதிகளவில் கார் உற்பத்தி செய்யும் மாநிலம் தமிழ்நாடுதான். அதேபோல் டெக்ஸ்டைல்ஸ், லெதர் போன்ற துறைகளிலும் நாம்தான் அதிகம் உற்பத்தி செய்கிறோம். இதுபோன்ற சூழலில் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் ஒரு பிரச்னை, அது சர்வதேச சந்தையை பாதிக்கிறது என்றால் அது தமிழ்நாட்டையும் பாதிக்கும்.
வேறு சில மாநிலங்கள் இம்மாதிரி பொருளாதார அறிக்கைகளை தயார் செய்துள்ளார்கள். தமிழ்நாட்டில் இதுதான் முதல்முறை.
இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் தமிழ்நாடு என்னென்ன சிக்கல்களை வரும் காலங்களில் எதிர்கொள்ளலாம் என்பதை சுட்டிக்காட்டுகிறோம். இதன் தொடர்ச்சியாக செயல்படுத்தப்படும் முன்னெடுப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறலாம்.
தேவநாகரியில் இருக்கும் ரூபாய் குறியீடு (₹) வேண்டாம் என்பதற்காகத்தான் ரூ என்ற இலச்சினை பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழர்கள் நிறைய விஷயங்களைச் செய்துள்ளார்கள். அதற்காக எல்லாவற்றையும் மேற்கொள்ள முடியாது அல்லவா” எனத் தெரிவித்தார்.