Weather update |வங்கக்கடலில் அடுத்த புயல்? உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!
Weather update| கடந்த வாரம் மோன்தா புயல் மிரட்டிய நிலையில், மீண்டும் தற்போது மத்திய வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்..
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு ஆரம்பிக்கும் முன்பே வழக்கத்தை விட மழைபொழிவு அதிகமாகவே இருந்தது. கடந்த 16ஆம் தேதி வடகிழக்கு பருவமழை ஆரம்பமான நிலையில் மோன்தா புயல் உருவானது.. அது சென்னையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அக்டோபர் 28ஆம் தேதி ஆந்திராவை நோக்கி நகர்ந்து அன்று இரவு காக்கிநாடாவுக்கு தெற்கே மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடந்தது.
இந்த மோன்தா புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் மிதமான மழைப்பொழிவு பலமணி நேரம் நீடித்தது. அத்துடன் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மழைபொழிவு இருந்தது...
இந்நிலையில் தமிழ்நாட்டில் வரும் நவம்பர் 4 ஆம் தேதி வரை மழை பொழிவு இருக்குமென என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதில் தமிழ்நாட்டின் ஒரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யலாம் என தெரிவித்திருந்தது. இதில் சென்னையை பொறுத்தவரை இடி - மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தை விட இந்த வருடம் வடகிழக்கு பருவமழை சுமார் 230 மி.மீ. மழை அதிகமாக பெய்துள்ளது. இது இயல்பை விட 57 சதவீதம் அதிகமாகும் எனவும் வங்கக்கடலில் மீண்டும் புயல்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது..
இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவித்துள்ளது.
மேலும் அக்டோபர் 30ஆம் தேதி மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், அக்டோபர் 31 ஆம் தேதியான நேற்று அதே இடத்திலேயே நிலவியது.. இது அடுத்த 24 மணிநேரத்தில் மத்திய கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகும் எனவும் தெற்கு மியான்மர், வடக்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக நிலவுகிறது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

