”ED-க்கு அல்ல, MODI-க்கும் நாங்கள் பயப்பட மாட்டோம்” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி
புதுக்கோட்டையில், கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 2017-18ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் 4.62 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நிலையில், தற்போது பாதியில் நிற்கப்பட்டுள்ள பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களோடு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்...
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுணக்கமாக நடைபெறும் பணிகள் கண்டறிந்து அதனை விரைவு படுத்த அறிவுறுத்தப்பட்டது. இதில், கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கடந்த 2017-18ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் 4.62 கோடி மதிப்பில் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம் கட்டும் பணி தொடங்கப்பட்டு அதற்குப் பிறகு நிதி நெருக்கடியால் அப்பணி கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், தற்போது அந்தப் பணியை முழுமை செய்ய 4.5 கோடி ரூபாய் தேவை என்று அதிகாரிகள் ஆய்வு செய்து தெரிவித்துள்ளனர். அதற்குரிய நிதியில் 3.50 கோடி தமிழ்நாடு முதலமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார். மீதமுள்ள ஒரு கோடியை சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியிலிருந்து வழங்குவார்கள். வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக பல்நோக்கு விளையாட்டு அரங்கம் கட்டும் பணி நிறைவடைந்து விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
நிதி உரிமையை கேட்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர், நிதி ஆயோக் கூட்டத்திற்குச் சென்றுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அரசியல் செய்யதான் செய்வார். ஈடி அல்ல, மோடி-க்கும் நாங்கள் பயப்பட மாட்டோம். தொடர்ந்து நாங்கள் குரல் கொடுத்துக் கொண்டுதான் இருப்போம். மிரட்ட பார்த்தார்கள். மிரட்டி அடிபணிந்து பயப்படுவதற்கு அடிமைக் கட்சி கிடையாது.
திமுக. கலைஞர் உருவாக்கிய திமுக. இது. சுயமரியாதை கட்சி. பெரியாரின் கொள்கை உடைய கட்சி. தப்பு செய்தவர்கள் தான் பயப்பட தேவை நாங்கள் யாருக்கும் அடிபணிய தேவையில்லை. பயப்பட அவசியமும் கிடையாது. எதுவாக இருந்தாலும் சட்டபூர்வமாக சந்திப்போம்" என்று உதயநிதி தெரிவித்தார்.