வங்கதேசம் | மீண்டும் அரசியல் குழப்பம்..ராஜினாமா செய்யும் முகமது யூனுஸ்?
ஜி.எஸ்.பாலமுருகன்
வங்கதேசத்தில் அரசு வேலைகளில் உள்ள இடஒதுக்கீட்டு முறைகளுக்கு எதிராக தொடங்கிய மாணவர் இயக்கங்களின் போராட்டம் வன்முறையாக மாறியது. இதைத் தொடர்ந்து 15 ஆண்டுகளாக பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, ராணுவ அழுத்தத்தின் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதன்பிறகு வங்கதேசத்தின தற்காலிக அரசை வழிநடத்தும் பொறுப்பை 84 வயதான நோபல் பரிசு பெற்ற MUHAMMAD YUNUS ஏற்றுக்கொண்டார். தற்போது அவரது செயல்பாடுகள் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாததால் பதவியிலிருந்து விலகும் எண்ணத்தில் இருப்பதாக MUHAMMAD YUNUS அறிவித்துள்ளார்.
பதவி விலகல் முடிவுக்கு, அரசியல் குழப்பங்கள் மட்டுமன்றி, இஸ்லாமிய அமைப்புகள், மாணவர் இயக்கங்கள் மற்றும் ராணுவத்தின் அரசியல் தாக்கங்கள் முக்கியக் காரணங்களாக உள்ளன. தான் இப்போது மக்கள் மீது பொறுப்புள்ளவனாக இருக்க முடியவில்லை என அவருக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யூனுஸ் பதவி விலகினால் நிலைமை மேலும் மோசமடையும் என, சில அமைச்சர்கள் பேசியுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலை வரும் டிசம்பருக்குள் நடத்த பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. ஆனால் யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, அரசியல் சூழ்நிலையை சீராக்கும் வரை தேர்தலை தள்ளிவைக்க திட்டமிட்டுள்ளது. அவாமி லீக் கட்சியின் பதிவை சட்டத்திற்குப் புறம்பாக இடைநிறுத்தி வைத்திருப்பதும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதற்கிடையே, டாக்காவில் நடைபெற் மாணவர் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டம், தற்போது தீவிரம் அடைந்து வருவதாக கூறப்படுகிறது. பலர் சாலைகளை மறித்து அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டுள்ளனர். போலீசார் கண்ணீர்புகை குண்டு வீசி, தடியடி நடத்தி அமைதியை நிலைநாட்டினர். மக்கள் மற்றும் அரசியல் அமைப்புகள் இணைந்து செயல்படாவிட்டால் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது என்று ராணுவ ஜெனரல் எச்சரித்துள்ளார். இதனால் வங்கதேசத்தின் நிலைமை பாகிஸ்தான் அல்லது மியான்மர் மாதிரியான ராணுவ-அரசியல் குழப்பங்களுக்கு இட்டுச்செல்லும் அபாயத்தில் இருப்பதாக அரசியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.