தூய்மைப் பணியாளர் போராட்டம் | ‘முதல்வர் சொன்னது இதுதான்’ - விரிவாக விளக்கிய கே.என்.நேரு!
70 வயதை கடந்த முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவன் திட்டத்தை திருச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு இன்று தொடங்கி வைத்தார். உறையூர் பகுதியில் நடந்த அந்த நிகழ்ச்சியில் தாயுமானவர் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சர் கே.என்.நேரு, அப்பகுதியில் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்களை வழங்கினார்.
தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது,
”முன்பெல்லாம் ரேஷன் கடைகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. கலைஞர் ஆட்சி காலத்தில் அது சரி செய்யப்பட்டது. தற்பொழுது, முதலமைச்சர் மு க ஸ்டாலின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் திட்டத்தை தொடக்கி வைத்துள்ளார். இது மிகவும் பயனுள்ள திட்டமாக உள்ளது. இந்த திட்டத்திற்காக 1128 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது 88 ஆயிரம் பேர் பயனடைய உள்ளனர்” தூஎன்றார்.
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் குறித்து பேசுகையில்,
”சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் துப்புரவு தொழிலாளர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். இந்தப் போராட்டத்தை சுமூகமாக முடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் முதலமைச்சர் எடுத்து வருகிறார். மேலும், வட மாநில தொழிலாளர்களை துப்புரவு பணியில் ஈடுபடுத்த உள்ளதாக பரவிவரும் தகவல் முற்றிலும் தவறானது.
துப்புரவு தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஒரே நாளில் நிறைவேற்ற முடியாது அதற்கு கால அவகாசம் தேவை. அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார் நிச்சயம் அது பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்படும்.
நான் தூய்மைப் பணியாளர்களை சென்று சந்திக்கவில்லை எனக் கூறுவது தவறு. ஏற்கனவே நான்கு முறை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களிடம் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளேன்.
தூய்மைப் பணியாளர்களுக்கு உள்ள பிரச்னை நாடு முழுவதும் உள்ள பிரச்னை. இதில், முதலமைச்சர் உரிய முடிவு எடுப்பார். தூய்மைப் பணியாளர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மேலும், தூய்மைப் பணி பாதிக்க கூடாது என்பதற்காக ஏற்கனவே பணியில் உள்ளவர்களை தான் பயன்படுத்தி வருகிறோம். புதிதாக யாரையும் புதிதாக பணியில் எடுக்கவில்லை.
தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அதில், ஒரு தீர்வு ஏற்பட்டவுடன் இன்று அல்லது நாளைக்குள் தூய்மை பணியாளர்களின் போராட்டம் முடிவுக்கு வரும்” என்றார்.
நாய்க்கடி பிரச்னை குறித்து..
தெரு நாய்களை கட்டுப்படுத்த உச்சநீதிமன்ற உத்தரவு அருமையான உத்தரவு. அந்த உத்தரவு நகல் வந்த உடன் அதனை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்துவோம். மிகப்பெரிய பிரச்சனையான தெருநாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு எங்களுக்கு நல்ல வாய்ப்பாக உள்ளது.
நிதி நிலைமைக்கு ஏற்ப ஒவ்வொரு திட்டமாக நிறைவேற்றி வருகிறோம். அறிவித்த வாக்குறுதிகளை மட்டுமல்லாமல் அறிவிக்காத வாக்குறுதிகளையும் முதல்வர் நிறைவேற்றி வருகிறார். தேர்தல் வருவதால் எதிர்க்கட்சிகள் ஏதாவது குறை கூறி வருகிறார்கள். என்று செய்தியாளர் சந்திப்பில் கே. என். நேரு தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.