”நாம் மாற்றுசக்தி அல்ல.. முதன்மை சக்தி என்பதை உணர்த்துவோம்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வரும் ஆகஸ்டு 21-ம் தேதி நடைபெற இருக்கிறது. மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் பாரபத்தி பகுதியில், சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன. மாநாட்டிற்கு இன்னும் ஒருவாரமே அவகாசம் இருக்கும் நிலையில், பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
250 அடி நீளம், 60 அடி அகலத்தில் பிரம்மாண்டமாக மேடை, விஜய் நடந்து செல்ல சுமார் 800 மீட்டர் நீளத்திற்கு ரேம்ப் வாக் மேடை, குடிநீர் குழாய், எல்.இ.டி திரை அமைக்கும் பணிகள் என்று பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
தவெகவின் முதல் மாநாடே தமிழக அரசியல் களத்தில் புயலை கிளப்பிய நிலையில், இரண்டாவது மாநாடும் கவனம் ஈர்த்துவருகிறது.
இந்த சூழலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களுக்கு மதுரை மாநாடு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் தவெக தலைவர். அதில் நாம் மாற்று சக்தி அல்ல, முதன்மை சக்தி என்பதை உலகிற்கு உணர்த்துவோம் என கூறியுள்ளார்.
மாற்று சக்தி நாமல்ல.. முதன்மை சக்தி!
தவெகவின் இரண்டாவது மாநாடு குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் தலைவர் விஜய், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு. வணக்கம்.
நம்மோட அரசியல் பயணத்துல அடுத்தடுத்த கட்டங்களத் தாண்டி வர்றோம்... இடையில எத்தனை சவால்கள், நெருக்கடிகள் வந்தாலும் எல்லாத்தையும் மக்கள் சக்தியோட, அதாவது உங்க ஆதரவால கடவுளோட அருளால கடந்து வந்துகிட்டே இருக்கோம்...
வர்ற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு நாம முழு வீச்சுல தயாராகிட்டு வர்றோம்... இந்தச் சூழல்ல நம்மோட இரண்டாவது மாநில மாநாட்ட ஆகஸ்ட் 21 (21/08/2025) வியாழக்கிழமை மதுரை, பாரப்பத்தியில நாம நடத்த இருக்கிறது உங்க எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்...
முத்தமிழையும் சங்கம் வச்சு வளர்த்த மதுரையில. நம்ம கொள்கை எதிரியையும். அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து நின்னு, ஜனநாயகப் போர்ல அவங்கள் வென்று தமிழ்நாட்டு மக்களுக்கான நல்லாட்சிய நிறுவுவதே நம்ம குறிக்கோள் என்ற நிலைப்பாட்டை உறுதி செய்யறதுதான் இந்த மாநாடு... அதனாலதான் வைகை மண்ணில் நடக்கும் இந்த மாநாடு, 'வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு' என்ற தேர்தல் அரசியல் மையக்கருத்த முன் வச்சி நடக்க இருக்குதுன்னு உங்களோட பகிர்ந்துக்கிறதுல ரொம்ப மகிழ்ச்சி...
மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம்.
மாற்று சக்தி நாமன்று. முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம்.
நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.” என அறிக்கையில் கூறியுள்ளார்.