வெளியேறும் அதிமுக MLA-க்கள்.. தவெகவில் ஐக்கியம்.. விஜயை விமர்சித்த திருமா!
அதிமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து தங்களது பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்துவிட்டு, தவெகவில் இணைந்து வருகின்றனர். இது, தமிழகத்தில் அடுத்தடுத்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், த்வெக அரசில் அங்கம் வைத்துள்ள விசிகவே இதை விமர்சித்திருப்பது கவனம் ஈர்த்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த தவெக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. அதேசமயம், இத்தேர்தலில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக படுதோல்வியடைந்தது. குறிப்பாக, எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூடப் பெற அக்கட்சி தவறியது. தோல்வி காரணமாக அக்கட்சியில் உட்கட்சிப் பூசல் நிலவி வருகிறது. இதனால் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் என ஒரு குழுவாகவும், எடப்பாடி பழனிசாமி ஒரு குழுவாகவும் இயங்கி வருகிறது. இதற்கிடையே எஸ்.பி.வேலுமணி தரப்பைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏக்களான மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா ஆகியோர் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேற்று சந்தித்து தங்களது பதவி விலகல் கடிதத்தை அளித்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் மூவரும் தவெகவில் இணைந்தனர்.
இதற்கிடையே, அவர்கள் பதவி விலகல் கடிதங்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதாக, அவர்கள் வெற்றிபெற்ற சட்டமன்றத் தொகுதிகள் தற்போது காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இத்தொகுதிகளில் இடைத்தேர்தல் வர இருக்கிறது.
இந்த நிலையில், இன்று காலை சபாநாயகரைச் சந்தித்த அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையாவும் தனது பதவி விலகல் கடிதத்தை அளித்தார். தவிர, அவரும் தவெகவில் இணைந்தார். அவரது விலகல் கடிதமும் ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து அம்பாசமுத்திரம் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் வர இருக்கிறது. ஏற்கெனவே முதல்வர் விஜய் இரண்டு இடங்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார். இதைத் தொடர்ந்து திருச்சி கிழக்குத் தொகுதிக்கு அவர் பதவி விலகல் கடிதம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, அதிமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து தங்களது பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்துவிட்டு, தவெகவில் இணைந்து வருகின்றனர். இதுதொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர், ”அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏக்கள் விலகி தவெகவில் இணைவது ஆரோக்கியமான அரசியலாக விடுதலைச் சிறுத்தைகள் உணரவில்லை. விமர்சனங்களுக்கு இடம்கொடுக்கும் வகையில் தவெக தலைமை செயல்படக் கூடாது. தவெக தலைமை இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு ஊக்கம் அளிக்கக் கூடாது. எந்தவொரு சட்டமன்ற உறுப்பினரும் பதவி விலகல் கடிதம் கொடுத்துவிட்டு வந்தாலும் அவர்களை கட்சியில் இணைத்துக் கொள்வது என்பது தவெக மீதான நம்பகத் தன்மையை பாதிக்கச் செய்யும்” எனத் தெரிவித்துள்ளார். இத்தகைய விமர்சனத்திற்கு மத்தியில், தவெக ஆட்சியில், விசிக இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

