டெல்டாவை நெருங்க முடியாத தவெக.. கோட்டையை தக்கவைத்த திமுக! விவரம்
இந்த தேர்தலில் தவெக வடக்கு மண்டலம், கொங்கு, முக்கிய நகரங்களில் பெரும் வெற்றி பெற்று அதிர்ச்சி அளித்த நிலையில், டெல்டா மண்டலத்தில் மட்டும் திமுகவின் செல்வாக்கு குறையாமல் தொடர்ந்தது. தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் திமுக கூட்டணி பல தொகுதிகளை வென்று, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக அமரும் நிலையை இந்த டெல்டா வெற்றிகளே உருவாக்கியுள்ளன.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் கருத்து கணிப்புகளை தவிடுபொடியாக்கி 108 கட்சிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகியுள்ளது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் திமுக கூட்டணி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், இறுதியில் திமுக கூட்டணி 73 இடங்களில் வெற்றிபெற்று இரண்டாம் இடம் பிடித்தது.
அதிமுக கூட்டணி 53 இடங்களில் வெற்றிபெற்று மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, மதுரை ஆகிய நகர்ப்புறங்களில் தவெக பெரும் வெற்றிபெற்றுள்ள நிலையில், வடக்கு மண்டலத்தில் தவெக பெரும் ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது.
அதே நேரம் அதிமுகவின் கோட்டையான கொங்கு பகுதியிலும் தவெக பெரும்பான்மையான தொகுதிகளை வென்றுள்ளது. இந்த சூழலில் திமுக தனது செல்வாக்கு கொண்ட பகுதிகளான சென்னை மண்டலத்தை இழந்தாலும், டெல்டா மண்டலம் தனது கோட்டை என்பதை திமுக மீண்டும் நிரூபித்துள்ளது.
டெல்டா மாவட்டங்களில் ஒன்றான திருவாரூரில் மொத்தமுள்ள 4 தொகுதிகளில் இரண்டு தொகுதிகளிலும், நாகப்பட்டினத்தில் உள்ள 3 தொகுதிகளில் இரண்டு தொகுதிகளிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளையும், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதியில் 6 தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. இந்த மாவட்டங்களில் தவெக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் டெல்டா மண்டலத்தோடு தொடர்புடைய திருச்சி மாவட்டத்தில் தவெக 6 இடங்களை கைப்பற்றி அதிரவைத்துள்ளது. அதே நேரம் புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக கூட்டணி 3 தொகுதிகள், கடலூர் மாவட்டத்தில் 5 தொகுதிகளை வென்று அங்கு தனது ஆதிக்கத்தை தக்கவைத்துள்ளது. இந்த டெல்டா பகுதிகளில் திமுக வென்ற இடங்களே அந்த கட்சி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக வர வழிவகுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

