கருணாநிதி முதல் உதயநிதி வரை.. எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது! தமிழக அரசியலின் பரபரப்பு வரலாறு!
காவிரி நீர் பங்கீடு குறித்து தமிழக அரசை குற்றம்சாட்டி தஞ்சையில் நடந்த திமுக போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு சர்ச்சை கிளப்ப, தஞ்சை காவல்துறை 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இன்று காலை அவரை இல்லத்தில் வைத்தே கைது செய்தது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் திமுகவினர் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கருணாநிதி நள்ளிரவு கைது முதல் மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி கைது வரை எதிர்க்கட்சித் தலைவர்களைச் சுற்றிய பரபரப்பு மீண்டும் தலைதூக்கியுள்ளது.
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று குற்றம்சாட்டி தஞ்சையில், திமுக சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த தஞ்சை காவல்துறை, உதயநிதி ஸ்டாலினை அவரது இல்லத்தில் வைத்துஇன்று காலை கைது செய்தது. இந்த கைது நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசியல் வரலாற்றில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்ட முக்கிய சம்பவங்கள் குறித்து பார்க்கலாம்.
தமிழக அரசியலில் இன்றளவும் அதிகம் பேசப்படும் கைது சம்பவம் என்றால், அது மறைந்த முன்னாள் முதல்வரும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மு. கருணாநிதியின் நள்ளிரவு கைது தான்.
2001 ஜூன் 30 அதிகாலை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில், சென்னை மேம்பால கட்டுமான முறைகேடு வழக்கில் மு. கருணாநிதி, சென்னை கோபாலபுரம் இல்லத்தில் இருந்து கைது செய்யப்பட்டார். நள்ளிரவில் நடைபெற்ற இந்த கைது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அதன்பிறகு, 2017-ஆம் ஆண்டு, அப்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்கச் சென்றபோதும், காவல்துறையால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
2018-ஆம் ஆண்டில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற மு.க. ஸ்டாலின் மீண்டும் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையும் மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
2022-ஆம் ஆண்டு, அப்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எடப்பாடி கே. பழனிசாமி, அதிமுக நடத்திய போராட்டத்தின் போது காவல்துறையால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். இதற்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்த வரிசையில் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் கைது செய்யப்பட்டுள்ளார். நாளை தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் எதிர்க்கட்சித்தலைவர் கைது செய்யப்பட்ட நடவடிக்கை மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் திமுகவினர் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.
செய்தியாளர் - ராஜ்குமார்.ர
