நள்ளிரவில் முடிவடைந்த அமலாக்கத்துறை விசாரணை: இன்று மீண்டும் ஆஜராக அமைச்சர் பொன்முடிக்கு சம்மன்!

அமைச்சர் பொன்முடி இல்லத்தில் நேற்று காலை தொடங்கிய அமலாக்கத்துறை சோதனை, நேற்று இரவு முடிவுற்ற நிலையில், அமைச்சரிடம் விசாரணை தொடர்ந்து வந்தது. அந்த விசாரணையும், இன்று அதிகாலை 3 மணியளவில் முடிவடைந்துள்ளது.

நேற்று (ஜூலை 17) காலை 7 மணி முதல் அமைச்சர் பொன்முடி மற்றும் அவர் மகன் எம்.பி கௌதம சிகாமணியின் இல்லம், அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றுவந்தது. இரவு 8 மணியளவில் அது முடிவுற்றது.

அமைச்சர் பொன்முடி
ED ரெய்டு: 13 மணி நேர சோதனைக்குப் பின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பொன்முடி!
ponmudi, ed
ponmudi, edtwitter

இதில் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையில், 41.9 கோடி ரூபாய் மதிப்புள்ள வைப்புத் தொகை முடக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. அதுதவிர பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணியும் நடைபெற்று வந்தது. அதேபோல் அமைச்சர் பொன்முடி மகனுக்குச் சொந்தமான இரண்டு சொகுசு கார்களை அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்திருந்தனர். அதில் முக்கிய ஆவணங்கள் இருந்ததாக சொல்லப்பட்டது.

இதையொட்டி அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டு நள்ளிரவு 3:00 மணி வரையில் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். அதன்பின் “அமைச்சர் கைது இல்லை” என அமலாக்கத்துறையினர் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் நள்ளிரவு 3:30 மணியளவில் வீடு திரும்பினார்.

அமைச்சர் பொன்முடி
“அமைச்சர் கைது இல்லை” - அமலாக்கத்துறை தகவலை தொடர்ந்து வீடு திரும்பினார் பொன்முடி!

இதைக்குறிப்பிட்டு, ”72 வயதான ஒருவரை நள்ளிரவில் விசாரிப்பது மனித உரிமை மீறல்” என திமுக வழக்கறிஞர் சரவணன் தெரிவித்தார். மேலும், அமைச்சர் பொன்முடி இன்று மாலை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் வழங்கப்பட்டுள்ளதாகவும் திமுக வழக்கறிஞர் சரவணன் தெரிவித்தார். இன்று அமலாக்கத்துறையின் விசாரணை முடிவுற்ற பிறகு, இவ்வழக்கில் அடுத்த கட்ட நகர்வு என்னவென்று தெரியவரும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com