"தமிழ்நாட்டை டெல்லியிடம் அடகு வைக்கத் தயங்காதவர்கள்.." - அதிமுகவை விமர்சித்த ஸ்டாலின்!
முதல்வர் ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், எதிர்க்கட்சிகளை விமர்சித்து, தமிழ்நாட்டை டெல்லியிடம் அடகு வைக்கத் தயங்காதவர்கள் என குற்றம் சாட்டியுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் சாதனைகளை எடுத்துரைத்து, மாநில உரிமைக்கான போராட்டத்தை தொடர்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலில் ஆளும் திமுக மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில் 26 கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைத்திருக்கிறது. அதேபோல, எதிர்க்கட்சியான அதிமுகவும், பாஜக, அமமுக கட்சிகள் உள்ளிட்ட 14 கட்சிகளுடன் மிகப்பெரிய கூட்டணியை அமைத்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. இது தவிர, முதன்முறையாக தேர்தலை சந்திக்கும் நடிகர் விஜயின் தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியனவும் களத்தில் உள்ளன. இதனால் வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தசூழலில் அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவரும் நிலையில், தேர்தலுக்காக கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தயார்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தான் திமுகவின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியிருக்கும் முக ஸ்டாலின் ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைத்த கையோடு, எதிர்க்கட்சியையும் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டை அடகுவைக்க தயங்காதவர்கள்..
”வெல்வோம் உடன்பிறப்புகளே.. உங்களின் உழைப்பால்..!” என்று கடிதம் எழுதியிருக்கும் திமுக தலைவர் முக ஸ்டாலின், ”கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியைச் சிறப்பாக நடத்தினோம். ஆனால், அது நமக்கு எளிதானதாக இல்லை. தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் தமிழர் விரோத - பழிவாங்கும் போக்கினால் ஏற்பட்ட பாதிப்புகளை எதிர்கொண்டு, மாநில உரிமைக்கான போராட்டத்தைத் தொடர்ந்தபடியே, ஜனநாயகம் காக்கும் அறப்போர்க்களத்தில் நின்றபடியேதான் எண்ணிக்கையில் அடங்காத சாதனைத் திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம். அதனால்தான், 2026 தேர்தல் களத்தைத் தமிழ்நாடு அணிக்கும் டெல்லி அணிக்குமான தேர்தல் என்று தொடர்ந்து சொல்லி வருகிறேன்.
தமிழ்நாடு VS டெல்லி என்பதை முன்வைத்துதான் இந்தத் தேர்தல் களம் என்று நாம் சொல்வதை நிரூபிப்பது போலவே, டெல்லியில் இருந்துதான் எல்லாம் முடிவு செய்யப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவரும் அவரது சகாக்களும் டெல்லியில் இருப்பது எதற்காக? தமிழ்நாட்டிற்கு வழங்கப்படாமல் வஞ்சிக்கப்படும் நிதியை வாங்கித் தருவதற்காகவா? தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படாமல் முடக்கப்பட்டிருக்கும் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துவதற்காகவா? மாநில உரிமைகளைக் காப்பாற்றுவதற்காகவா? சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காகவா? இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை.
தமிழ்நாட்டில் உள்ள வீடுகளில் அடுப்பு எரிந்தால் என்ன, எரியாவிட்டால் எங்களுக்கென்ன என்ற மனநிலையுடன்தான் எதிர்க்கட்சியினர் தங்களது கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருக்கிறனர். தேர்தல் களத்தைச் சந்திப்பதற்கே டெல்லியின் சம்மதம் வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்களின் கைகளில் தமிழ்நாடு சிக்கிக்கொண்டால் ஒவ்வொரு நாளும் என்ன பாடுபட வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்துள்ள தமிழ் மக்கள் ஒருபோதும் டெல்லியின் ஆதிக்கத்தையும், அதன் அடிமைக் கூட்டத்தையும் அனுமதிக்க மாட்டார்கள். தங்கள் சுயநலனுக்காகச் சொந்தக் கட்சியை அடமானம் வைத்ததுபோல, தமிழ்நாட்டையும் டெல்லியிடம் அடகு வைக்கத் தயங்காதவர்கள் அவர்கள் என்பதை மக்கள் அறிவார்கள். இனி எதிர்க்கட்சியினர் எடுக்கும் முடிவு என்பது டெல்லி எடுக்கும் முடிவுதான் என்பதையும் மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்பதற்கும், தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்குமான வலிமை தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே உண்டு என்பதே மக்களின் உறுதியான நம்பிக்கை. அந்த நம்பிக்கையை உருவாக்கியது திராவிட மாடல் ஆட்சி. அதனால் நாம் மக்களிடம் செல்வோம். களத்தில் நின்று வெற்றியைப் பெறுவோம்” என பதிவிட்டுள்ளார்.

