மேகதாது அணைக்கு எதிராக சட்டமன்றத்தில் இன்று தனித்தீர்மானம்.!
தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்தபின் நடைபெற்ற முதல் சட்டப்பேரவை கூட்டத்தில், ஆளுநர் அர்லேகர் தமிழ்த்தாய் வாழ்த்தை மரபுப்படி ஏற்று முழு உரையையும் வாசித்தது முக்கிய முன்னேற்றமாகும். இன்று நடைபெறும் இரண்டாம் நாள் கூட்டத்தில், கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தும் தனித்தீர்மானத்தை முதல்வர் முன்வைக்க உள்ளார்.
தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்தபிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர், நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. முந்தைய ஆட்சியின்போது முன்னாள் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முதலில் பாடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, மத்திய அரசுக்கு எதிரான வாக்கியங்களை உரையின்போது படிக்காமல் புறக்கணிப்பையும் செய்திருந்தார்.
இந்நிலையில் தவெக தலைமையிலான அரசும் சட்டப்பேரவையில் இதுவரை பின்பற்றபட்ட மரபுகளே தொடரும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாக பாடப்படும்போது, ஆளுநர் அர்லேகர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உரையாற்றாமல் வெளிநடப்பு செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. ஆனால் சர்ச்சைக்கு இடமளிக்காத ஆளுநர் அர்லேக்கர் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டதுமுதல் ஆளுநர் உரையில் இருந்த அனைத்தையும் வாசித்து உரையை தொடங்கி வைத்தார்.
மேலும், உரையில் 1967 அண்ணா, 1977 எம்.ஜி.ஆருக்கு பின்னர் 2026 ஆம் ஆண்டு தமிழக அரசியலில் வரலாற்றுப் புரட்சி நடந்துள்ளது. கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் தவெக ஆட்சி அமைத்துள்ளது என பாராட்டுக்களை தெரிவித்தார்.
இந்நிலையில் சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தொடரில் இன்று மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம் உள்ளிட்ட பல விசயங்களை தமிழக அரசு மேற்கொள்ள உள்ளது.
2ஆம் நாள் கூட்டத்தொடரில் என்னென்ன..?
இன்றைய தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தில் மேகதாது அணைக்கு எதிராக முதல்வர் விஜய் தனித்தீர்மானம் கொண்டுவரவுள்ளார். மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த அணை திட்டத்துக்கு எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்தியும், அரசின் தனித்தீர்மானத்தை முதல்வர் முன்மொழியவுள்ளார். இதுதொடர்பாக பேரவையில் விவாதம் நடத்தப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தவிர இடதுசாரி தலைவர் நல்லகண்ணு, திரை பிரபலங்கள் பாரதிராஜா, ஆர்.பி. சவுத்திரி ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும், தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை, பேரவை துணைத் தலைவர் முன்மொழியவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

