போர்க்களமான ரிப்பன் மாளிகை.. நள்ளிரவில் கைது செய்யப்பட்ட தூய்மை பணியாளர்கள்
சென்னை ராயபுரம், திரு.வி.க நகர் மண்டலங்களில் தூய்மை பணியை கடந்த மாதம் முதல் தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மை பணியாளர்கள் கடந்த 1ஆம் தேதி முதல் சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதை அனுமதிக்க முடியாது என்றும், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் போராட்டம் நடைபெற்ற இடத்தில் நள்ளிரவு காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் அங்கிருந்து செல்ல மறுத்த நிலையில், அவர்களுக்கு ஆதரவாக பலர் குவிந்தனர். இந்நிலையில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக திரண்ட சுமார் ஆயிரம் பேர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். போராட்டக்காரர்கள் மற்றும் போலீஸார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிலர் மயக்கம் அடைந்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் பேருந்தில் பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். வேளச்சேரி அம்மா மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்ட 50 பேர் பேருந்தில் இருந்து இறங்கி, அங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை காவல் துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதற்கிடையே தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்திய ரிப்பன் மாளிகை பகுதியில், மாநகர காவல் ஆணையர் அருண் ஆய்வு மேற்கொண்டார். சென்னை மாநகர் முழுவதையும் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்த காவல் துறையினர், தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அண்ணா சாலை, சர்தார் படேல் சாலை, வேளச்சேரி - சின்னமலை சந்திப்பு, வடசென்னை உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.