சேலம்: வடமாநிலத்தவருடன் மோதல் - சோதனை சாவடி பணியில் இருந்த 3 காவலர்கள் சஸ்பெண்ட்
செய்தியாளர்: பாலகிருஷ்ணன்
உத்தரப்பிரதேசத்தில் இருந்து வந்த சொகுசு பேருந்து ஒன்று, மேட்டூர் வழியாக கர்நாடக மாநிலம் சென்று கொண்டிருந்தது. அதனை தமிழக கர்நாடக எல்லையான காரைக்காடு மதுவிலக்கு சோதனை சாவடி போலீசார், தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு ஆவணங்களை எடுத்து வரும்படி கூறியுள்ளனர்.
ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர் வடமாநில பேருந்து ஓட்டுனர் மற்றும் பேருந்தில் பயணம் செய்தவர்கள். அப்போது ஏற்பட்ட தகராறில் அவர்கள் பணியில் இருந்த சுகனேஸ்வரன், செந்தில்குமார், முத்தரசன் ஆகிய மூன்று காவலர்களையும் வடமாநிலத்தவர்கள் இரும்பு ராடால் தாக்கியுள்ளனர். இதைக் கண்ட அப்பகுதி கிராம மக்கள் போலீசாருக்கு ஆதரவாக வடமாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தி காவலர்களை காப்பாற்றியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ், கொளத்தூர் காவல் ஆய்வாளர் தொல்காப்பியன் ஆகியோர் வடமாநிலத்தைச் சேர்ந்த 4 பேரை கைது செய்து விசாரணை செய்தனர். இதில் பேருந்து ஓட்டுனர் சிவ்நாராயணன், அவரது உதவியாளர் அஜய் ஆகிய இருவர் மீதும் இரண்டு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.
மேலும் இது தொடர்பாக காரைக்காடு சோதனை சாவடியில் பணியில் இருந்த காவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல், சோதனை சாவடி பணியில் இருந்த சுகவனேஸ்வரன், செந்தில்குமார், முத்தரசன் ஆகிய மூன்று பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.