மலைப் பாம்புகள், மரப் பல்லிகள் கடத்தல் - சென்னையில் இருவர் கைது
மலேசியாவிலிருந்து சென்னைக்கு வந்த பயணிகளின் பையிலிருந்து சுங்கத்துறை அதிகாரிகள் குட்டி மலைப்பாம்பு மற்றும் பல்லி ஆகியவற்றை கண்டுபிடித்துள்ளனர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பாடிக் ஏர்வேஸ் விமானம் நேற்று சென்னை வந்தது. இந்த விமானத்தில் எதோ ஒரு பொருள் கடத்தப்பட்டு வருகிறது என்ற தகவல் சுங்கத் துறைக்கு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் இந்த விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்து உள்ளனர். இதில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் முன்னுக்குபின் முறனான தகவல்களை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த பையை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்தப் பையிலிருந்து குட்டி மலைப்பாம்புகள் மற்றும் பல்லிகள் கண்டுபிடித்தனர். இதனை அவர்கள் உடைகளுக்கு நடுவில் மறைத்து வைத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்களின் விவரம் தெரியவந்தது. அதன்படி ஒருவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது பர்வேஸ் (36) மற்றொருவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முகமது அக்பர்(28) எனத் தெரியவந்தது. சுங்கத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இவர்கள் இருவரும் மலேசிய விமான நிலையத்திற்கு வெளியே ஒருவர் தங்களிடம் இந்தப் பையை கொடுத்ததாகவும் இதனை சென்னை விமானநிலையத்தில் ஒருவர் வந்து வாங்கிக் கொள்வார் என்று தெரிவித்ததாகவும் கூறியுள்ளனர்.
எனினும் இவர்கள் கூறியதை போல் யாரும் அந்தப் பையை வாங்க வராததால் இவர்கள் இருவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் இந்த விலங்குகளை பத்திரமாக மீட்டு மலேசியா நாட்டிற்கே திருப்பி அனுப்ப முயற்சி எடுத்து வருகின்றனர்.