தேர்தலில் தீவிரம் காட்டும் பாமக.. திருமா கூட்டணியில் இணையும் ராமதாஸ்?
விசிக தலைவர் திருமாவளவன் இடம்பெற்றுள்ள கூட்டணியில் இணைவீர்களா? என்ற கேள்விக்கு அரசியலின் எதுவும் நடக்கலாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் காரணமாக பாமக தலைவர் அன்புமணி - நிறுவனர் ராமதாஸ் இடையேயான முரண்பாடு, தேர்தலுக்குள் முடிவுக்கு வர வாய்ப்பில்லை என்றே பார்க்கப்படுகிறது. இருதரப்புமே தேர்தல் முடிவை நான்தான் எடுப்பேன் என உறுதியாக இருப்பதே மோதல் நீடிப்பதற்கு காரணம். இந்தச் சூழலில் இருவரில் ஒருவரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கூட்டணி கட்சிகளுக்கு உள்ளது. அந்த வகையில் அன்புமணியை பாஜக- அதிமுக கூட்டணி தேர்வு செய்துள்ளது. இதனால், கொதிப்படைந்து போய் உள்ளார் ராமதாஸ். தேர்தலில் தன்னுடைய பலத்தை காட்ட முழு சக்தியைச் செலவிட வேண்டும் என்று ஆதரவாளர் மத்தியில் ராமதாஸ் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாமகவைப் பொறுத்தவரை இந்த தேர்தல் களம், இரு தரப்புக்குமே, கட்சி யார் கையில் உள்ளது என்பதை தெளிவுபடுத்துவது தொடர்பானது என்பது குறிப்பிடத்தக்கது. ராமதாஸிடம் திமுக இணக்கமாகவே இருந்து வருகிறது. அதேசமயம், விசிக உள்ளே இருப்பதால் திமுக கூட்டணிக்குள் வரக்கூடிய வாய்ப்பு இருக்குமா எனவும் அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதே சமயத்தில், தவெக தரப்பிலிருந்தும் பாமகவுடன் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. எப்படியும் தனித்துச் செல்வதைக் காட்டிலும் ஏதோ ஒரு கூட்டணியில் இடம்பெறுவதையே ராமதாஸ் விரும்புவதாகவும், திமுக கூட்டணியே முதல் விருப்பம் என்று ராமதாஸ் தரப்பில் இருந்து சமிக்ஞை தரப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், ராமதாஸ் தலைமையிலான பாமகவின் சார்பில் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவதற்கான விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யும் பணி இன்று விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் தொடங்கியது. இன்று காலை 10 மணிக்கு பாமகவின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் விருப்ப மனுக்களை விநியோகம் செய்தார்.
முதல் மனுவாக செயல் தலைவர் ஸ்ரீகாந்தி தமது விருப்ப மனுவை ராமதாஸிடம் வழங்கினார். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸிடம், ”விசிக தலைவர் திருமாவளவன் இடம்பெற்றுள்ள கூட்டணியில் இணைவீர்களா” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ”அரசியலில் எதுவும் நடக்கலாம். முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி நன்றாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

