வீட்டின் வெளியே அமர்ந்திருந்தவரை கடித்தே கொன்ற பிட்புல் நாய்.. சென்னையில் பரபரப்பு..!
சென்னையில் ஜாபர்கான் பேட்டையில், கருணாகரன் என்பவர் தனது வீட்டின் வெளியே அமர்ந்திருந்தபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் பூங்கொடியின் பிட்புல் நாய் அவரை கடித்து கொன்றது. இந்த சம்பவம் சென்னையில் வளர்ப்பு நாய்கள் மற்றும் தெரு நாய்களால் ஏற்படும் தாக்குதல்கள் குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.
சென்னை ஜாபர்கான் பேட்டை, VSM கார்டன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன். 48 வயதான இவர் சமையல் வேலை செய்து வந்துள்ளார். வழக்கம்போல இன்றும் சமையல் வேலையை முடித்துவிட்டு சுமார் மூன்று மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார். தனது வீட்டின் வெளியே இளைப்பாற அமர்திருந்தபோது பக்கத்து வீட்டில் வசிக்கும் பூங்கொடி என்பவர் தனது பிட்புல் நாயை அழைத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார். இவரைக் கடந்து செல்ல முயன்றபோது பிட்புல் நாய் திடீரென மணிகண்டனை கடிக்கத் தொடங்கியுள்ளது. கருணாகரனின் ஆணுறுப்பு மற்றும் தொடையைப்பகுதியை சரமாரியாக வெறிகொண்டு கடித்துள்ளது. இதில் ரத்தப்போக்கு ஏற்பட்டு கருணாகரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நாயின் உரிமையாளர் பூங்கொடி நாயைக் கட்டுப்படுத்த எவ்வளவோ முயன்றும் அவரையும் நாய் கொடூரமாக கடித்துள்ளது.
பூங்கொடியின் பிட்புல் நாய் அவரைக் கடித்ததில் அவருக்கும் பலத்த காயம் ஏற்படவே அவரை மீட்ட பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் அவரை கேகே நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குமரன் நகர் காவல்துறையினர் கருணாகரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்துவிட்டு இதுகுறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தடைசெய்யப்பட்ட பிட்புல் நாய் கடித்து ஒருவர் உயிரிழந்த நிலையில் வளர்த்து வந்தவரும் அந்நாய் கடித்ததில் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் சென்னையில் வளர்ப்பு நாய்கள் மற்றும் தெரு நாய்களால் ஏற்படும் தாக்குதல்கள் குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது. சென்னையில் தெரு நாய்களின் எண்ணிக்கை சுமார் 1.8 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும், 2024ஆம் ஆண்டில் 14,000 நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில், “டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் உள்ள அனைத்து தெருநாய்களையும் பிடித்து உடனடியாக அதற்காக அமைக்கப்பட்டுள்ள காப்பகங்களில் அடைக்கவேண்டும். ஒரு நாயைக்கூட அங்கிருந்து வெளியே விடக்கூடாது. தெருநாய் இல்லாத டெல்லியை உருவாக்கவேண்டும். இவ்வாறு அடைக்கப்பட்டுள்ள தெருநாய்களுக்கு கருத்தடை ஊசி போடப்படவேண்டும். இந்த நடவடிக்கைகளை தடுப்பவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு பாயும்” என்று உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பு தற்போது நாடு முழுவதும் பல எதிர்மறை விமர்சனங்களையும் போராட்டங்களையும் சந்தித்து வரும் நிலையில் மீண்டும் சென்னையில் நாய்க்கடியால் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது.