ஆண்டிபட்டி| 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. தட்டிக்கேட்ட தந்தை மீது தாக்குதல்!
ஆண்டிபட்டி அருகே மலை கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து 20 நாட்களுக்கு மேல் ஆகியும் காவல்துறையினர் அவரை கைது செய்யவில்லை என பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து போக்சோ சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குபதிவு செய்தும் தற்போது வரை குற்றவாளியை கைது செய்யவில்லை என்று தேனி மாவட்ட ஆட்சியரிடமும், ஆண்டிப்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ள பெற்றோர், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
என்ன நடந்தது?
11 வயதான ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமியை எதிர்வீட்டில் வசிக்கும் 52 வயதான நபர் அவரது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுமி அவரது பெற்றோரிடம் கூறி பெற்றோர்கள் நேரில் சென்று சம்பந்தப்பட்ட நபரிடம் கேட்டபோது, சிறுமியின் தந்தையை தவறு செய்த நபரும், அவருடைய உறவினர்களும் சேர்ந்து அடித்ததாகவும், அடித்ததில் காயம் ஏற்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுமியின் தந்தை சிகிச்சை பெற்றதாகவும் தெரிவிக்கின்றனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை கைது செய்யக்கோரி, \ அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து 20 நாட்களுக்கு மேல் ஆகியும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு மட்டும் செய்து சம்பந்தப்பட்ட நபரை இதுவரை கைது செய்யவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தது மட்டுமின்றி, இதனை தட்டிக்கேட்ட சிறுமியின் தந்தையையும் தாக்கியதாக வேதனை தெரிவித்துள்ள பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததோடு, ஆண்டிப்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் மனு அளித்துள்ளனர். உடனடியாக சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த நபரை கைது செய்யவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.