திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை| குற்றவாளியிடம் சம்பவ இடத்தில் வீடியோ வாக்குமூலம்!
திருவள்ளூரில் கடந்த 12ஆம் தேதி பள்ளி முடித்து வீடு திரும்பிய 8 வயது சிறுமி வடமாநில இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி சென்னையில் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்த சம்பவம் குறித்து போக்ஸோ வழக்கு பதிந்து தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். குற்றம் நடைபெற்ற 14-வது நாளில் கடந்த 25-ஆம் தேதி ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டையில் குற்றவாளி அசாம் மாநிலத்தை சேர்ந்த ராஜு பிஸ்வகர்மா கைது செய்யப்பட்டார். பின்னர் சுமார் 24 மணி நேர விசாரணைக்கு பின்னர் 26-ஆம் தேதி இரவு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
குற்றவாளியிடம் வீடியோ வாக்குமூலம்..
இந்த நிலையில் குற்றவாளியை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என காவல் துறை தரப்பில் திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த திருவள்ளூர் போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார்.
இதனையடுத்து குற்றவாளி ராஜு பிஸ்வகர்மாவை நேற்றிரவு கவரைப்பேட்டை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 2ஆம் நாளான இன்று அதிகாலை குற்றம் நடைபெற்ற ஆரம்பாக்கம் மாந்தோப்பிற்கு அழைத்து சென்று ஒப்புதல் வாக்குமூலம் பெற்றனர்.
சிசிடிவி காட்சிகளில் பதிவான கடையில் நின்றும், குற்றம் நடைபெற்றதற்கு பிறகு அங்கிருந்து தப்பி சென்றது குறித்தும் குற்றவாளி ராஜு பிஸ்வகர்மாவிடம் கேட்டு ஒப்புதல் வாக்குமூலம் பெற்று விசாரணை முழுவதையும் காவல்துறையினர் வீடியோ பதிவு செய்து கொண்டனர்.
முன்னதாக விசாரணைக்காக பாலியல் குற்றவாளி அழைத்து வரப்பட்டதால் அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்லாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தொடர்ந்து அங்கிருந்து மீண்டும் கவரைப்பேட்டை காவல் நிலையம் அழைத்து வந்து 2-வது நாளாக தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது.