புது கட்சி தொடங்கும் யோசனையில் அண்ணாமலை.? ஓரிரு வாரங்களில் அறிவிப்பை வெளியிட வாய்ப்பு!
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை புதிய கட்சி தொடங்கும் முனைப்பில் உள்ளதாகவும், அவர் வெளியேறுவதை தடுக்க பாஜக டெல்லி மேலிடம் முக்கிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்தபோது 2024 மக்களவைத் தேர்தலில் தனி அணி அமைத்து போட்டியிட்டு பாஜக 11 சதவீத வாக்குகளைப் பெற்றது. பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை மாற்றப்பட்ட பிறகு, அதிமுகவுடன் சேர்ந்து வலுவான கூட்டணி அமைத்தும்கூட பாஜகவால் 3 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.
மாநிலத் தலைவராக அண்ணாமலை பணியாற்றிய போது அவரது அதிரடியான பேச்சாலும் துடிப்பான செயல்பாட்டாலும் ஏராளமான இளைஞர்கள் கவரப்பட்டார்கள். அண்ணாமலையின் பதவி பறிப்பு ஒரு பக்கம் நடந்த நிலையில், தமிழக அரசியலில் புதிய வரவான விஜய் தலைமையிலான தவெக, தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. திமுக, அதிமுக மட்டுமல்லாமல் அனைத்து கட்சி வாக்குகளிலும் கை வைத்த தவெக, பாஜகவின் வாக்கு சதவீதத்தையும் சுருக்கியது.
தமிழக அரசியலில் இளைஞர்களால் பெரும் அரசியல் மாற்றம் நிகழந்துள்ள நிலையில், பாஜகவில் தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று அண்ணாமலை கருதுவதாகவும், அதனாலே துடிப்பான அரசியலை சுதந்திரமாக முன்னெடுக்க தனிக்கட்சி தொடங்குவதே வழி என திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜய், உதயநிதி வரிசையில் தன்னையும் முன்னிறுத்திக்கொள்ள அண்ணாமலை முயற்சிப்பதாக கூறப்படும் நிலையில் அவரை எப்படியாவது பாஜகவில் தக்கவைக்க வேண்டும் என்று பாஜக டெல்லி தலைமை காய்நகர்த்துவதாக கூறுகின்றனர்.
மீண்டும் மாநிலத் தலைவர் பதவியை அண்ணாமலைக்கு அளிப்பது அல்லது மத்திய இணையமைச்சர் பதவி வழங்குவது என டெல்லியும் இரு வாய்ப்புகளை அவர் முன்வைப்பதாகவும் பேச்சு எழுந்துள்ளது. ஆனால், தனிக்கட்சி தொடங்கி துடிப்பான எதிர்கட்சித் தலைவராக தமிழக அரசியலில் வலம் வர வேண்டும் என அண்ணாமலை உறுதியாக உள்ளதாகவும் ஓரிரு வாரங்களில் அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறுகின்றனர்.

