கர்நாடகா | ஜூன் 3-ல் முதல்வராகிறார் டி.கே. சிவகுமார்.. ஆளுநரிடம் முறைப்படி கடிதம்!
2023ஆம் ஆண்டு தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்த நிலையில், முதல்வர் பதவிக்காக சித்தராமையா, டி.கே.சிவகுமார் மற்றும் ஜி.பரமேஷ்வர் ஆகிய 3 பேர் இடையே போட்டி ஏற்பட்டது. பின்னர், கட்சியில் ஏற்பட்ட நீண்ட இழுபறிக்குப் பிறகு, சித்தராமையாவுக்கு முதல்வர் பதவியும், டி.கே சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டிருந்தது. அப்போது, இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வழங்குவதாக கூறி, காங்கிரஸ் மேலிடம் அவர்களை சமாதானம் செய்ததாகக் கூறப்பட்டது. ஆனால் வெளிப்படையாக எதுவும் அறிக்கப்படவில்லை. இதையடுத்து, முதல்வராக சித்தராமையா பதவியேற்றார். துணை முதல்வராக டி.கே.சிவகுமார் இருந்து வருகிறார்.
இந்தசூழலில் தான், கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி இரண்டரை ஆண்டுகள் கடந்ததிலிருந்தே, சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என டி.கே. சிவகுமார் ஆதரவாளர்கள் போர் கொடி தூக்கி வந்தனர். இதன்காரணமாக கடந்த மே 26-ம் தேதி கர்நாடக முதல்வரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக, மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் ராகுல்காந்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், சித்தராமையா பதவி விலக வேண்டும் எனவும் அவர் தேசிய அரசியலில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து, நேற்றைய முன்தினம் சித்தராமையா தான் தனது முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக ஆளுநர் மாளிகையில் ராஜினாமா கடிதம் அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், தான் தனது வாக்கை காப்பாற்றி விட்டதாகவும், தேசிய அரசியலில் தனக்கு விருப்பமில்லை. எப்போது, கர்நாடகாவில் இருக்கவே விரும்புகிறேன் எனவும் தெரிவித்திருந்தார். ராஜினாமா கடிதம் அளிப்பதற்கு முன்னதாக, சித்தராமையா வீட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், டி.கே. சிவகுமார் சித்தராமையாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றிருந்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
தொடர்ந்து, நேற்று சித்தராமையாவின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்வதாக ஆளுநர் தெரித்திருக்கிறார். இதையடுத்து, இன்று காங்கிரஸின் சட்டமன்றத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியின் 135 எம்.எல்.ஏ-க்கள், 2 இணை உறுப்பினர்கள் மற்றும் ஒரு விவசாய சங்க எம்.எல்.ஏ என மொத்தம் 138 சட்டமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் காங்கிரஸின் சட்டமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளளார் டி.கே. சிவகுமார்.
இதையடுத்து இன்று, மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராகப் பதவியேற்க அனுமதி கோரி டி.கே. சிவகுமார் ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டிடம் முறைப்படி கடிதம் அளித்துள்ளார். அதில், ஜூன் 3-ம் தேதி (புதன்கிழமை) மாலை 4:05 மணிக்கு, பெங்களூருவில் உள்ள லோக் பவனில் தான் முதலமைச்சராகவும், தனது அமைச்சரவை சகாக்கள் அமைச்சர்களாகவும் பதவியேற்க அனுமதி வழங்குமாறு அவர் கோரியிருக்கிறார். இதன்மூலம், டி.கே. சிவகுமார் தனது அரசியல் பயணத்தின் உச்சகட்டமாக முதலமைச்சர் அரியணையில் அமர உள்ளார்.

