“பொதுவெளியில் எல்லை கடந்து அறுவெறுக்கத்தக்க வகையில் ஆபாசமாக பேசுகிறார் சீமான்” - ஜோதிமணி காட்டம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான வழக்கு விசாரணைக்காக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்றிரவு ஆஜராகிறார். முன்னதாக இன்று காலை தருமபுரியில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் பாலியல் வன்கொடுமை குறித்து உதாரணம் கூறுவதாக நினைத்து மிக மோசமான கருத்தைப் பதிவு செய்தார். பின் சென்னை வந்த அவரிடம் புதிய தலைமுறை செய்தியாளர் அதுகுறித்து கேட்டபோது அப்போதும் மிக மோசமான கருத்தைப் பதிவு செய்திருந்தார். இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சீமானின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “சீமான் பொதுவெளியில், எல்லை கடந்து வெளிப்படையாக அறுவெறுக்கத்தக்க வகையில் ஆபாசமாகவும், கீழ்த்தரமாகவும் பேசுகிறார். இவரெல்லாம் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருப்பது வெட்கக்கேடானது. தமிழ்நாட்டிற்கே தலைகுனிவு. பாதிக்கப்பட்ட பெண்ணை அவமதிப்பது மட்டுமல்லாமல் பெண் இனத்தையே சீமான் அவமதிக்கிறார்.
அவரைப் பொறுத்தவரை பெண்ணை தூக்கிப்போய் பாலியல் வன்கொடுமை செய்யாமல் வேறு எவ்விதமான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டாலும் அது பிரச்சினையில்லை. எவ்வளவு வக்கிரமான மனநிலை! அந்தக் குற்றச்சாட்டைத்தான் விஜயலட்சுமி சீமான் மீது வைக்கிறார். ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டு அவரை ஏமாற்றுவதும் சட்டப்படி கடுமையான குற்றமே என்பதை சட்டம் சீமானுக்குப் புரிய வைக்கும்.
இப்படி ஆபாசமாக பாலியல் வக்கிரத்தோடு,பெண்களை அவமதிக்கும் வகையில்,பெண்களின் பாதுகாப்பிற்கும், கண்ணியத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பேசுகிற ஒருவரை ஒரு சமூகமாக நாம் கடுமையாக எதிர்க்கவேண்டும்.
இப்படிப்பட்ட பாலியல் வக்கிரம் பிடித்தவர்களுக்கு, பெண்களை கேவலமாக நினைப்பவர்களுக்கு பொதுவாழ்வில் எவ்வித இடமும் இருக்கக்கூடாது. சீமானின் இந்தப் பேச்சிற்காக காவல்துறை அவர் மீது தனியாக வழக்குப் பதிவுசெய்ய வேண்டும். நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சகோதர, சகோதரிகள் இப்படிப்பட்ட கேவலமான பேச்சை, செயலை ஆதரிக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
தமிழ் தேசியம் என்பது பெண்களை ஆபாசமாகவும்,பாலியல் வக்கிரத்தோடும் பேசுவதல்ல. பெண்களின் கண்ணியத்தை மதிக்கக்கூடியது. வீரத்தைப் போற்றக் கூடியது என்பதை நினைவில் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.