தேர்தல் தேதி அறிவிப்பு.. அமலானது தேர்தல் நடத்தை விதிமுறைகள்.. அகற்றப்படும் முதல்வர் படம்.!
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி (யூனியன் பிரதேசம்) ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்துள்ளார். அதன்படி, தமிழ்நாட்டில், ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதேபோல, புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் ஆகிய 3 மாநிலங்களில் ஏப்ரல் 9-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. மேற்கு வங்கத்தில், ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இந்த 5 மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் மே-4 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன.
அரசு அலுவலகங்களில் இருந்து அகற்றப்படும் தலைவர்களின் படங்கள்.!
இந்த சூழலில் தான், தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்திருக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், அரசு அலுவலங்கங்களில் உள்ள தலைவர்களின் புகைப்படங்கள் மறைக்கப்படும். அதன்படி, தமிழ்நாட்டில் அரசு அலுவலங்கங்களில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களின் படங்கள் மற்றும் பெயர்கள் மறைக்கப்பட்டு அல்லது அகற்றப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த மாநிலங்களில் தேர்தல் பறக்கும் படையினர் இனி தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள். அரசின் செலவில் சாதனைகளை விளக்கிச் செய்தித்தாள்கள் அல்லது தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்யத் தடை விதிக்கப்படுவதுடன், அனைத்து அரசு கட்டடங்களில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் விளம்பரங்கள், சுவா் விளம்பரங்கள் சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் செலவில் அகற்றப்பட வேண்டும். அதன்படி, சுவர் விளம்பரங்களை அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது
தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக, புதிய நலத்திட்டங்கள், சலுகைகள், நிதி உதவிக்கு தடை. அரசு, பொதுத் துறை நிறுவனங்களில் பணி நியமனம் கூடாது. ரொக்கம், தங்கம், வெள்ளிப் பொருட்கள் கொண்டு செல்வதில் கட்டுப்பாடு. அரசு, காவல் அதிகாரிகளை மாற்ற தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம்உள்ளிட்ட தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. விதிமீறல் நடந்தால் ‘சிவிஜில்’ செயலி மூலம் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
