5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி.. வாக்குப்பதிவு முதல் வாக்கு எண்ணிக்கை வரை.. முழு விவரம்.!
பெரும் எதிர்பார்ப்புக் கிடையில், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்திருக்கிறது. முன்னதாக, புதுடெல்லியில் உள்ள விஞ்ஞான் பவன் வளாகத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவருடன், தேர்தல் ஆணையர்கள், சுக்பிர்சிங்க் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
தமிழ்நாட்டில் 75 ஆயிரம் வாக்குச் சாவடிகள்:
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஞானேஷ் குமார், ”தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் ஆலோசனை செய்தோம். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் ஆலோசனைப் பெறப்பட்டன. தகுதி வாய்ந்த ஒரு வாக்காளரின் வாக்கு கூட விடுபட்டு விடக்கூடாது என்ற நோக்கில், எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற்றன. 5 மாநிலங்களில்,17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்று உள்ளனர். வெளிப்படையான நியாயமான தேர்தல் நடத்த உரிய ஏற்பாடுகள் செய்யப்படும். இந்தத் தேர்தலில், 25 லட்சம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ளனர். 700 பேருக்கு 1 வாக்குச்சாவடி என 5 மாநிலங்களில் 2.18 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. . தமிழ்நாட்டில் மட்டும் 75,032 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு, வயதானவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படும். வாக்களர்களுக்கு குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி செய்து தரப்படும்” எனத் தெரிவித்தார்.
வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள்:
தொடர்ந்து பேசிய அவர், ”8.5 லட்சம் பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். வாக்குச்சாவடி முழுவதும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்களில், வேட்பாளர்களின் வண்ணப்புகைப்படங்கள் இடம்பெறும். ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஒரு முறை வாக்கு சதவீதம் அறிவிக்கப்படும். தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்களர்கள் உள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள வருச நாட்டிற்கு செல்வதற்கு மட்டும் 3 மணி நேரம் ஆகிறது. அங்கு 5 பேருக்கு ஒரு வாக்குச் சாவடி அமைக்கப்படவுள்ளது” எனத் தெரிவித்தார்.
ஏப்ரல் 23-ல் வாக்குப்பதிவு
கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 9 ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாக ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மே 4 (திங்கள் கிழமை) 5 மாநிலங்களுக்கான தேர்தல் வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
தொடர்ந்து, தமிழகத்தில் வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 30ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 6. வேட்பு மனு பரிசீலனை ஏப்ரல் 7. வேட்புமனு திரும்பப் பெற ஏப்ரல் 9 என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

