”நாங்க வழக்கறிஞர்கள்.. அப்படித்தான் செய்வோம்..” கடற்கரைக்கு சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டல்!
சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கு 22 வயதான ஐடி பெண் ஊழியர் நேற்று நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது கடை ஒன்றின் முன் நண்பர்களோடு நின்றிருந்த போது, குடிப்போதையில் அங்கு வந்த வழக்கறிஞர்கள் 6 பேர் கொண்ட குழுவினர் அப்பெண்ணை கடந்து சென்றுள்ளனர். அப்பொழுது வழக்கறிஞர்கள் கும்பலில் ஒருவர் அப்பெண்ணிடம் அத்துமீறி அறுவறுக்கத்தக்க வகையில் மிகவும் மோசமாக நடந்துகொண்டதாக தெரிகிறது.
இதனை தட்டிக்கேட்ட பெண்ணிடம் நாங்கள் எல்லாம் வழக்கறிஞர்கள் எனக் கூறி அப்படி தான் செய்வோம் என்ன செய்வாய் என மிரட்டியுள்ளனர்.
வழக்கறிஞர் கைது செய்து சிறையில் அடைப்பு..
பயந்து போன பெண் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில், சாஸ்திரி நகர் போலீஸார் நிகழ்விடம் சென்று குடிபோதையில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வேளச்சேரியை சேர்ந்த வழக்கறிஞர் சாய்கிரிதரன் (24) என்பவரை காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டவர்கள் காவல்துறையிடமும் வழக்கறிஞர்கள் என வாக்குவாதம் செய்துள்ளனர்.
பின்னர் பெண் வன்கொடுமை சட்டம், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.