”கொலையுண்டு கிடப்பது உன் காதலன்!” - கவின் காதலிக்கு ஆணவக் கொலையால் கணவரை இழந்த கௌசல்யா கடிதம்!
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த சந்திரசேகர் என்ற விவசாயியின் மகன் 26 வயதான கவின்குமார். இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் ஐடி ஊழியராக பணியாற்றி வருகிறார். பட்டியலினத்தை சேர்ந்தவரான இவர் மாற்றுசாதி பெண்ணை காதலித்து வந்ததாக சொல்லப்படும் நிலையில், காதலுக்கு பெண்ணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பெண்ணின் தந்தை சரவணன் ராஜபாளையம் பட்டாலியனிலும், தாய் கிருஷ்ணகுமாரி மணிமுத்தாறு பட்டாலியனிலும் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றிவரும் நிலையில், பெண் வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி கவின்குமார் காதலித்ததாக தெரிகிறது.
இந்தசூழலில் சென்னையிலிருந்து விடுமுறைக்கு சொந்தஊர் வந்த கவின்குமாரை, தனியாக சந்தித்து பேசிய காதலிக்கும் பெண்ணின் தம்பி சுர்ஜித் (24) மறைத்துவைத்திருந்த அரிவாளால் வெட்டி ஆணவப் படுகொலை செய்தார். இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், பெண்ணின் பெற்றோர் இருவரும் சப்-இன்ஸ்பெக்டர் பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பெண்ணின் பெற்றோரை கைதுசெய்யவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து கவினின் உறவினர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், ஆணவப் படுகொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் கவினின் காதலிக்கு கௌசல்யா எழுதியுள்ள உருக்கமான கடிதம், இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
2016ஆம் ஆண்டு தனது கல்லூரி காதலன் சங்கரை சாதி மறுப்பு திருமணம் செய்தார் கௌசல்யா. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கௌசல்யாவின் குடும்பத்தினர், இதை ஏற்க முடியாமல் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த சங்கரை கௌசல்யாவின் கண்முன்னேயே கொன்று போட்டனர். தனக்கு நேர்ந்த துயரத்தை சொல்லி கௌசல்யா, கவினின் காதலிக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
கௌசல்யா எழுதியுள்ள கடிதத்தில், கவினுக்காக நீதியின் பக்கம் உறுதியாக நிற்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
”தோழி சுபாஷிணிக்கு,
வணக்கம். நான் கெளசல்யா எழுதுகிறேன். முதலில் எனது வேண்டுகோள் : என்ன ஆனாலும் நீங்கள் கவின் பக்கம்தான் நிற்க வேண்டும்!
இங்கு கொலையுண்டு கிடப்பது நீங்கள் நேசித்த , கரம் பிடித்த, கை கோர்த்து நடந்த காதலன்! நீங்கள் அழைத்ததற்காகத்தான் கவின் உங்கள் தம்பியிடம் பேச சென்றிருப்பான்! கவினுக்கான நீதியின் பக்கம் நீங்கள் உறுதியாக நிற்க வேண்டும்! அப்படிச் செய்தால் என் வாழ்க்கை என்ன ஆகும் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். அதை என்னால் புரிந்து கொள்ள இயலும்.
நான் என் சங்கரை இழந்த பின்பு யாரும் இல்லாத அனாதை போலவே நின்றேன். ஒவ்வொரு பெரியாரிய அம்பேத்கரியத் தோழர்களும் அவர்களின் பிள்ளையைப் போல் என்னை அரவணைத்துக் கொண்டனர். இன்று வரை(10 ஆண்டு ஆகப் போகிறது) சாதியைத் தூக்கிப் பிடித்த குடும்பத்துடன் எந்த உறவும் இல்லாமல் என்னால் வாழ முடிகிறது. அதற்குத் தோழர்கள் என்னை தங்கள் மகளாக பார்த்து கொண்டு என் சுயமரியாதையுடன் சொந்த காலில் நிற்க இன்று வரை உடன் இருக்கின்றனர்!
எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் நீதியின் பக்கம் என் காதலின் பக்கம் என்னால் உறுதி குலையாது வாழ முடிகிறது ! காரணம் சங்கரின் வழக்கில் எந்த இடத்திலும் நான் பொய் சொல்லவில்லை! சமரசம் இப்போது வரை செய்து கொள்ள வில்லை ! இனியும் செய்து கொள்ள மாட்டேன். நான் தொடக்கத்தில் சந்தித்த நெருக்கடிகள் பெரிது. என்னைப் போல் உன்னையும் சாதி வெறியர்கள் பற்றிக் கொள்வார்கள்! எவராக இருந்தாலும் என்ன அழுத்தம் தரப்பட்டாலும் உன் கவினுக்காகத் துணிவோடு நில்! உன் பக்கம் நான் இருக்கிறேன்; நாங்கள் இருக்கிறோம்! நடந்ததை அப்படியே சட்டத்தின் முன் சொல்ல வேண்டும்!
நீ கவினின் காதலுக்கு நேர்மையாக இருப்பாய் என்பதை உணர்வேன். கவினின் உயிருக்கு விடை எடுத்தாக வேண்டும். கவினுக்காக மட்டுமல்ல கவின்களுக்காகவும் உன்னிடம் இறைஞ்சுகிறேன். தோழி! எல்லாவற்றையும் தாண்டி நான் இருக்கிறேன். கவினின் நீதிக்கு நானும் உன்னோடு இணைந்து கொள்கிறேன். வா ! எதற்கும் அஞ்சாதே! உன்னைத் தாங்கிக் கொள்ள நான் இருக்கிறேன்; நாங்கள் இருக்கிறோம்!
அன்புடன்,
கெளசல்யா” என எழுதியுள்ளார்.
தோழியே எனக் குறிப்பிட்டு கொலையுண்ட கவினின் காதலிக்கு கௌசல்யா எழுதியுள்ள கடிதம் கவனம் ஈர்த்து வருகிறது.