நட்சத்திரத் தொகுதி | மயிலாப்பூரில் களமிறங்கியுள்ள தமிழிசை.. களம் எப்படி இருக்கிறது?
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர், தெலங்கானா, புதுச்சேரியின் முன்னாள் ஆளுநர் என்று பல பொறுப்புகளை வகித்த தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுவதால், நட்சத்திர தொகுதியாகியிருக்கிறது மயிலாப்பூர். 2006 தேர்தலில் ராதாபுரம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தமிழிசை, 2011 தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்டார். இரண்டு தேர்தல்களிலும் அவர் தோல்வியையே சந்தித்தார். ஆளுநர் பொறுப்புகளுக்கு பின்னர் மாநில அரசியலுக்குத் திரும்பிய தமிழிசை, 2024 மக்களவைத் தேர்தலில் தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் தென்சென்னைக்கு உட்பட்ட மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் மட்டும் சுமார் 39,000 வாக்குகளை பெற்ற நம்பிக்கையே, அவரை இம்முறை மயிலாப்பூரில் போட்டியிட வைத்திருக்கிறது.
முன்னேறிய சமூகத்தினர், அரசு ஊழியர்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஆன்மீகப் பின்புலம் கொண்டவர்கள் பரவலாக வாழும் தொகுதி மயிலாப்பூர். கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 95 ஆயிரம் வாக்காளர்கள் இத்தொகுதியில் இருக்கிறார்கள். மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக 7 முறையும், திமுக 6 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், 2001இல் முதன்முறையாக பாஜகவை சட்டமன்றத்திற்கு அனுப்பிய 4 தொகுதிகளில் ஒன்று மயிலாப்பூர். அப்போது பாஜக சார்பில் போட்டியிட்ட கே.என். லட்சுமணன் 60,000-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். 2016இல் அதிமுகவின் நடராஜ் 68,000 வாக்குகள் பெற்று வெற்றியைத் தன்வசப்படுத்தினார். 2021 தேர்தலில் திமுகவின் வேலு கிட்டத்தட்ட 68,000 வாக்குகள் பெற்று வென்றார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மயிலாப்பூர் தொகுதியில் குடிசைகளை அகற்றி புதிய வீடுகள் கட்டித் தரும் திட்டத்தை திமுக எம்எல்ஏ வேலு முன்னெடுத்துள்ளார். மெட்ரோ ரயில் பணிகள், மழைநீர் வடிகால் அமைப்புகள் திட்டங்களையும் மேற்கொண்டார். போக்குவரத்து நெரிசல், பழைய குடியிருப்புகள் மறுசீரமைப்பு போன்றவை தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த முறை பாஜக சார்பில் தமிழிசை சவுந்திரராஜன் களமிறங்கியுள்ளார். அவருக்கு எதிராக திமுக சார்பில் வேலுவே மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். நாதக சார்பில் அருண், தவெக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் வெட்கட்ரமணன் போட்டியிடுவதால், மயிலாப்பூர் களம் சூடுபிடித்துள்ளது.

